Last Updated:
கேம்ப்பல் 87 ரன்களுடனும், ஷாய் ஹோப் 66 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.
டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் 3 ஆவது நாள் ஆட்டம் நிறைவுபெற்றுள்ளது. முன்னதாக முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் ஃபாலோ ஆன் ஆகி 2 ஆவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் 2 ஆவது போட்டி நேற்று முன்தினம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசிய நிலையில் 518 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் 5விக்கெட்டுகளையும், ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்தியாவை விடவும் முதல் இன்னிங்ஸில் 270 ரன்கள் பின்தங்கியதால் ஃபாலோ ஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் 2 ஆவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்சை விடவும் 2ஆவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தொடக்க வீரர் சந்திரபால் 10 ரன்களும், அலிக் அதானாசே 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தாலும் பின்னர் இணைந்த ஷாய் ஹோப் – ஜான் கேம்ப்பல் இணை பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்து வருகிறது. இருவரும் இன்றைய 3 ஆம் நாள் ஆட்டத்தின் முடிவில் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.
நாளை இந்திய அணி விக்கெட்டுகளை விரைந்து கைப்பற்றினால், நாளையே 2 ஆவது டெஸ்ட் முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
October 12, 2025 5:18 PM IST


