Last Updated:
T20 உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தானை 8 போட்டிகளில் 7 முறைகள் வென்றுள்ளது. 2007 பௌல்-அவுட் வெற்றி, சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் முக்கிய பலம்.
இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதினாலே, ஆயிரம் கோடிகளை தாண்டிய வர்த்தகம், full house என களைகட்டும். இந்த ஆண்டு, இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என முதல் முரண்டு பிடித்த பாகிஸ்தான் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் விளையாட ஒப்புக்கொண்டது. இதனால் இப்போட்டி கூடுதல் கவனத்தையும் பெற்றுள்ளது. T20 உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை, இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவேரை 8 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 7 போட்டிகளில் இந்தியாவும் ஒரே போட்டியில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. இதில் 2007-ஆம் ஆண்டு ‘பௌல்-அவுட்’ வெற்றியும் அடங்கும்.
2007-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது டி20 உலகக் கோப்பையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. அப்போது, வெற்றியை தீர்மானிக்க ‘பௌல்-அவுட்’ முறை பயன்படுத்தப்பட்டது. இரு அணிகளிலிருந்தும் தலா 5 பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஸ்டம்புகளை நோக்கி பந்து வீசினர். அதிக முறை ஸ்டம்புகளை வீழ்த்துபவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி துல்லியமாக வீசக்கூடிய வீரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரைத் தேர்வு செய்தார். இவர்கள் மூவருமே தங்களது வாய்ப்பிலேயே ஸ்டம்புகளைத் தகர்த்தனர். பாகிஸ்தான் தரப்பில் முதலில் யாசிர் அராஃபத், உமர் குல் மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகியோர் பந்து வீசினர். ஆனால், மூவருமே ஸ்டம்புகளைத் தவறவிட்டதால் இந்தியா 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இலங்கை போட்டியிலும், இந்தியாவுக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நமிபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாத அபிஷேக் சிங், இந்த போட்டியிலும் விளையாடவில்லை என்றால், அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். இந்தியாவின் மிகப்பெரிய பலமே குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி தான். கொழும்புவின் மெதுவான ஆடுகளத்தில் இவர்களின் ‘மிஸ்டரி’ சுழலை எதிர்கொள்வது பாகிஸ்தானுக்கு கடினம்.
சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 தரவரிசையில் முன்னிலையில் இருப்பதோடு, மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் அடிக்கும் திறன் கொண்டவர். திலக் வர்மா மற்றும் இஷான் கிஷன் போன்ற வீரர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். விக்கெட்டுகள் சரிந்தால் ஆட்டத்தை மீட்கும் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவை மட்டுமே நம்பியுள்ளது. பும்ராவைத் தவிர மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் கடைசி ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் அவ்வப்போது சவால்களை எதிர்கொள்கின்றனர். ஷாஹீன் அப்ரிடி மற்றும் நசீம் ஷா கூட்டணி புதிய பந்தில் விக்கெட் எடுப்பதில் வல்லவர்கள். இந்தியாவின் டாப்-ஆர்டரை ஆரம்பத்திலேயே வீழ்த்துவது இவர்களின் திட்டமாக இருக்கும்.
கேப்டனாக இல்லாவிட்டாலும் , பாபர் அசாம் நங்கூரம் போல் நின்று ரன் சேர்க்கக்கூடியவர். இந்தியாவிற்கு எதிராக அவர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துவது பாகிஸ்தான் அணிக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. சதாப் கான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் பங்களிக்கக்கூடியவர்கள்.
பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பல நேரங்களில் மிடில் ஓவர்களில் பவுண்டரிகள் அடிக்கத் தவறி, ஸ்கோர் வேகத்தைக் குறைக்கின்றனர். இந்திய ஸ்பின்னர்களுடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தானின் ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளை எடுக்கக் தடுமாறுகிறார்கள். இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது ஏற்படும் மனரீதியான அழுத்தம் பல நேரங்களில் பாகிஸ்தான் வீரர்களை தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டி விடுகிறது.


