Last Updated:
IND vs NZ | இந்திய அணியின் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் கடந்த டி20 போட்டியின் நாயகன் அபிஷேக் சர்மா அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஓரளவுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொதப்பினர். இருப்பினும், நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 44 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் கடந்த டி20 போட்டியின் நாயகன் அபிஷேக் சர்மா அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இருப்பினும், அடுத்தடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர்.
15 புள்ளி 2 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 82 ரன்களும், இஷான் கிஷன் 76 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. 28 பந்துகள் மீதமுள்ள நிலையில் 209 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டியது.
இந்தப் போட்டியில் காண்பித்த அதிரடியில் மூலம் 468 நாளுக்குப் பின் அரைசதம் அடித்தார் சூர்யகுமார் யாதவ். கடந்த 23 டி20 இன்னிங்ஸ்களில் முதல் அரைசதமாகும். கடந்த 2024 அக்டோபரில் பங்களாதேஷுக்கு எதிராக அவர் அடித்த அரைசதத்திற்கு பின் 468 நாட்களுக்குப் பிறகு நேற்று சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


