Last Updated:
இந்தியா-நியூசிலாந்து கடைசி லீக் போட்டியில் மோதுகின்றன. இந்தியா வென்றால் முதலிடம் பிடிக்கும். விராட் கோலி 300வது போட்டியில் பங்கேற்கிறார். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறின.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவால் வீழ்த்த முடியாத அணியாக வலம் வரும் நியூசிலாந்தை, இன்றைய போட்டியில் இந்தியா வீழ்த்துமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப்-பி பிரிவில் அனைத்து போட்டிகளும் நிறைவடைந்து தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. குரூப்-ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில், இரு அணிகளும் இன்று கடைசி லீக் போட்டியில் மோத உள்ளன. புள்ளிகள் அடிப்படையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் முதலிடத்தை பிடிக்கவும், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதில்லை என்ற வரலாற்றையும் திருத்தி எழுதவும் வாய்ப்பு ஏற்படும்.
இதனிடையே, இன்று தனது 300வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்கும் விராட் கோலி, 300 போட்டிகளில் விளையாடிய 7-ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார். அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங், தோனி ஆகியோருக்குப் பிறகு விராட் கோலி 300-ஆவது போட்டியில் விளையாடவுள்ளார்.
இதற்கிடையே, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்தை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேறியது. கராச்சியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி, 38.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சென் 39 ரன்களை விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
Also Read | Champions Trophy : செமி ஃபைனலில் இந்தியாவுடன் மோதும் அணி எது?
தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா, 29.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 181 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் டூசன் ஆட்டம் இழக்காமல் 72 ரன்களும், கிளாசன் 64 ரன்களையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றி மூலம் குரூப் பி பிரிவில் முதலிடம் பிடித்து தென் ஆப்பிரிக்காவும், 2ம் இடம் பிடித்து ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
குரூப் ஏ பிரிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இதே நான்கு அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 02, 2025 8:03 AM IST


