Last Updated:
ஜெய்ஸ்வால் மற்றும் கில் சதம் அடித்ததால் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோரின் சதத்தால் 359 ரன்கள் குவித்து இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் உள்ள லீட்ஸில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வாலுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த கே.எல்.ராகுல், 42 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே அறிமுக வீரராக களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன், பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். நான்காவது வீரராகக் களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில், அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தி, 127 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
அதேபோல அவருக்குப் பக்கபலமாக விளையாடிய ரிஷப் பந்த், 65 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருக்கிறது. இன்னும் களத்தில் கருண் நாயர், ஜடேஜா ஆகிய வீரர்கள் உள்ளதால், இந்திய அணி 400 ரன்களை நிச்சயம் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
June 21, 2025 8:26 AM IST


