
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு (International Monetary Fund – IMF) இன்று வியாழக்கிழமை (22) இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘டித்வா’ (Ditwa) புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாக ஆய்வு செய்வதற்கும், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுவதாக IMF தெரிவித்துள்ளது.
இன்று நாட்டிற்கு வருகை தரும் இந்த பிரதிநிதிகள் குழு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
‘டித்வா’ புயலால் உருவான பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்களை இலங்கை எவ்வாறு எதிர்கொண்டுள்ளது என்பதையும், உட்கட்டமைப்பு, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மீது ஏற்பட்ட தாக்கங்களையும் புரிந்துகொள்வதே இக்குழுவின் பிரதான நோக்கமாகும்.
இதற்கிடையில், IMF இலங்கைக்கு வழங்கும் விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வு அண்மையில் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான அனுமதியை வழங்குவது தொடர்பாகவும் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

