கோலாலம்பூர்:
மலேசியா, உயர் வருமான நாடுகளின் நிலையை எட்டும்போது தனது நிதி நிலையை வலுப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, பொருட்கள் மற்றும் சேவை வரி (GST)யை மீண்டும் அறிமுகப்படுத்துவதுடன், எரிபொருள் மானியங்களை படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என பொருளாதாரக் கூட்டுறவு, வளர்ச்சி அமைப்பு (OECD) வலியுறுத்தியுள்ளது.
கோலாலம்பூரில் வெளியிடப்பட்ட அதன் சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையின்படி, நாட்டின் வரி அடிப்படையை விரிவுபடுத்துவதும், மானியங்களை இலக்கிட்டு வழங்குவதும் அவசியமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்பு, கல்வி, முதியோர் நலனுக்கான செலவினங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வரி வருவாயை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள OECD, இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி (GDP) 4.9 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.



