பி.ஆர்.ஜெயசீலன், ரா.தங்கமணி
கிள்ளான், மார்ச் 7-
கிள்ளானில் புகழ்பெற்ற ஜிஎம் கிள்ளான் (GM Klang) பேரங்காடி ரமலான் நோன்புச் சந்தையை ஏற்படுத்திக் கொடுத்ததன் வாயிலாக மாற்றுத் திறனாளிகள் 15 பேர் உட்பட 35 உள்ளூர் சிறு, நடுத்தர வணிகர்களை ஊக்குவிக்கிறது. 

இந்த ரமலான் சந்தையில் ஆடை, அணிகலன், உணவு, இனிப்புகள், வீட்டு அலங்காரங்கள் உட்பட பலவேறு ரமலான், நோன்புப் பெருநாள் கொண்டாட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்று ஜிஎம் கிள்ளானின் தொடர்பு மேலாளர் நோர் சுஹைடா பிந்தி ஒத்மான் தெரிவித்தார்.

இத்தகைய நடவடிக்கை ஜிஎம் கிள்ளானின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வை (CSR) வெளிப்படுத்துகிறது.

ஜிஎம் கிள்ளான் வழங்கும் இத்தகைய வாய்ப்பின் வழி மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினர் மத்தியில் வணிகங்களை மேம்படுத்தவும் வணிகச் சுற்றுச்சூழல் அமைப்பில் போட்டித்தன்மை அதிகரிக்கவும் இந்த வாய்ப்பு அவர்களுக்கு உதவுகிறது.

சரியான வாய்ப்பும் ஆதரவும் கிடைக்கப்பெறும்போது ஒவ்வொரு வணிகரும் வெற்றி பெறும் ஆற்றலை பெறுகின்றனர் என்று அவர் மேலும் விவரித்தார்.

ஜிஎம் கிள்ளான் வழங்கும் வாய்ப்பின் வழியாக மாற்றுத் திறனாளிகளின் திறனை மேம்படுத்துகிறோம். இதனால் அவர்கள் தங்களது வணிகத்தை திறம்பட மேம்படுத்திக் கொள்ள முடிகிறது என்று அவர் சொன்னார்.

பிற்பகல் 3.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை நடைபெறும் மக்களின் ஆதரவு வலுவாக உள்ளது. அதோடு நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜிஎம் கிள்ளான் பேரங்காடி இரவு 10.00 மணிவரை மக்களின் பண்டிகைகால கொண்டாட்டத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று நோர் சுஹைடா சொன்னார்.


இதனிடையே, நேற்று முன்தினம் ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் நடைபெற்ற நோன்புத் துறப்பு நிகழ்வில் உள்ளூர் வட்டாரத்தைச் சேர்ந்த 500 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் மையத்தைச் சேர்ந்தவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.




