Global Fuel Shock: உலகமே எதிர்பார்த்து வந்த விஷயம் உண்மையிலேயே நடக்குது.. எச்சரிக்கும் Chevron சிஇஓ!
ஈரான் போரின் மூலம் உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் ராணுவத்தால் முடக்கப்பட்ட நிலையில் பல்வேறு சந்தை வல்லுனர்கள் உலகளவில் நீண்ட கால எரிபொருள் தட்டுப்பாடு வரும் என எச்சரித்தனர்.
இதற்கு ஏற்றார் போல் முதல் சிக்னலாக அமெரிக்காவில் காஸ்ட்கோ நிறுவனம் மோட்டார் ஆயில் விநியோகத்தில் கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது, அதாவது வாரத்தில் ஒருவருக்கு 2 பாட்டில் மட்டுமே கொடுக்கப்படும் என அறிவித்து விலையையும் உயர்த்தியுள்ளது. காஸ்ட்கோ தொடர்ந்து வால்மார்ட் நிறுவனமும் அடுத்தாக அறிவிக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பொதுவாக ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் முதல் கட்டமாக விலை உயரும், விலை உயர்வுக்கு பின்பும் டிமாண்ட் குறையாமல் இருந்தால் கட்டாயம் விற்கப்படும் அளவு கட்டுப்படுத்தப்படும் அதாவது Rationing துவங்கும், இதுவும் வேலைக்கு ஆகவில்லை எனில் மொத்தமாக விற்பனை நிறுத்தப்படும் அல்லது Rationing கடுமையாக்கப்படும். இதில் முதல் 2 விஷயங்கள் தற்போது எரிபொருள் சந்தையில் நடந்துள்ளது.
பெரிய ரீடைல் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பல்க் முறையில் முன்கூட்டியே குறைந்தது 3-6 மாதத்திற்கு முன்பு ஆர்டர் செய்யும். அப்படி பார்க்கும் போது சந்தையில் எரிபொருள் மற்றும் பெட்ரோலியம் பொருட்களுக்கு தட்டுப்பாடு வரும் என காஸ்ட்கோ உணர்ந்து இந்த கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது.
உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு வருவதை காஸ்ட்கோ முதல் கட்ட சிக்னலாக கொடுத்தாலும் இதை உண்மை என உணர்த்தும் வகையில் அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான Chevron CEO மைக் விர்த் தெரிவித்துள்ளார்.
உலகளவில் எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகள் எச்சரித்து வந்த எரிபொருள் நெருக்கடி தற்போது உண்மையாகவே உருவாகிவிட்டதாக Chevron CEO மைக் விர்த் தெரிவித்துள்ளார்.
உலகளவில் பல்வேறு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் நிர்வாகிகள், இத்துறை வல்லுனர்கள் எச்சரித்தது போலவே உலகில் எரிபொருள் நெருக்கடி தற்போது உண்மையாகவே உருவாகிவிட்டதாக செவ்ரான் சிஇஓ மைக் விர்த் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் வழித்தடத்தில் ஏற்பட்ட எண்ணெய் போக்குவரத்து பாதிப்பை சவுதி மூலம் செங்கடல் விழியாக பாப் அல் மண்டெப் வழித்தடத்தின் மூலம் ஈடு செய்து வந்த நிலையில், தற்போது ஹவுத்திக்கள் சவுதி எண்ணெய் அலைகள், பைப்லைன்களை தாக்கியிருக்கும் நிலையில் சப்ளை பெரிய அளவில் பாதிக்க துவங்கியுள்ளது.
இது மட்டும் அல்லாமல் பாப் அல் மண்டெப் வழித்தடத்தை கைப்பற்றும் வகையில் ஹவுத்திக்கள் யெமன் நாட்டின் மோச்சா என்னும் துறைமுக நகரத்தை கைப்பற்றி சவுதி கப்பல்களை தாக்கி வருகிறது. இதனால் ஆசிய, ஐரோப்பா, அமெரிக்கா வரையில் சப்ளை தடைபட்டு உள்ளது. இதேநேரத்தில் உக்ரைன் ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யாவில் உள்நாட்டு சப்ளை பாதிக்கப்பட்டதை தாண்டி ஏற்றுமதியும் பாதிக்க துவங்கியுள்ளது.
இதுக்குறித்து மைக் விர்த் கூறுகையில் ஒருப்பக்கம் சப்ளையும் குறைந்துள்ளது, உலக நாடுகளில் சேமிப்பு கையிருப்பும் குறைந்துள்ளதால் Global Fuel Shock உருவாக துவங்கியுள்ளதாக தெரிவித்தார்.
சவுதி அரேபியாவின் East-West Pipeline மீது ஹவுதிக்கள் நடத்திய தாக்குதலால் இதன் வாயிலாக சந்தைக்கு தினமும் வரும் 25 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் தற்காலிகமாக முடங்கியுள்ளது. இதன் எதிரொலியாகவே தற்போது கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதேவேளையில் அமெரிக்க அரசு தற்போதைய எண்ணெய் சப்ளை பாதிப்பு வெறும் தற்காலிகமான பிரச்சனை என்று தொடர்ந்து கூறி வருகிறது. அமெரிக்காவில் உருவாகியிருக்கும் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வெனிசுலா கச்சா எண்ணெய்யை பயன்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

