விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணியில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிராக வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டங்கள், பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற காரணமாக அமைந்தன.
ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி பின்னர், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இடைக்கால அரசு நாட்டின் சட்ட ஒழுங்கு மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சுமார் 12.7 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். 300 தொகுதிகளுக்கு நேரடியாக தேர்தல் நடைபெற உள்ளது.
50 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 50 இடங்களுக்கு நேரடியாகத் தேர்தல் நடக்காது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 உறுப்பினர்கள் விகிதாச்சார அடிப்படையில் பெண் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த தேர்தலோடு தேசிய பொது வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. நாட்டின் அரசியலமைப்பில் அடிப்படை மாற்றங்களைச் செய்ய உருவாக்கப்பட்ட ‘ஜூலை தேசிய சாசனம்’ குறித்து மக்களின் கருத்தை அறிய இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
தேர்தலில் வாக்களிக்க உள்ள ஒவ்வோர் வாக்காளருக்கும் இரண்டு வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும். அதில் வெள்ளை நிற சீட்டு நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கவும் பிங்க் நிற சீட்டு பொது வாக்கெடுப்பிற்காகவும் வழங்கப்படும்.
பிங்க் நிற சீட்டில் ஜூலை தேசிய சாசன சீர்திருத்தங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஏற்கிறீர்களா என்ற கேள்வி மட்டும் கேட்கப்பட்டிருக்கும். அதற்கு, “ஆம்” அல்லது “இல்லை” என்ற ஒரே ஒரு பதிலை மட்டும் அளிக்க வேண்டும்.
இந்த வாக்கெடுப்பில் மக்கள் “ஆம்” என்று வாக்களித்தால், 4 முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். முதலாவது, தற்போது உள்ள ஒரு அவைக்குப் பதில், 100 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை உருவாக்கப்படும்.
இரண்டாவது, ஒருவர் அதிகபட்சம் 10 ஆண்டுகள் அதாவது 2 முறைகள் மட்டுமே பிரதமராக இருக்க முடியும்.
பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, ஜனாதிபதி மற்றும் பிற தன்னாட்சி அமைப்புகளுக்கு உதாரணமாக தேர்தல் ஆணையம் போன்றவற்றிக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும்.
குடிமக்கள் “பெங்காலி” என்பதற்குப் பதில், அனைத்து சிறுபான்மையினரையும் உள்ளடக்கிய “பங்களாதேஷி” என்று அழைக்கப்படுவார்கள்.
இந்த மாற்றங்களை ஆதரித்து “ஆம்” என்று வாக்களிக்க வேண்டும் என பொது மக்களை இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் வலியுறுத்தியுள்ளார்.
BNP மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிகள் ஜூலை தேசிய சாசனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜதியா கட்சி பொது வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து “இல்லை” என்று வாக்களிக்கக் கோரியுள்ளது.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அக்கட்சி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.
ஒருவேளை வாக்கெடுப்பில் “ஆம்” வென்றால், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றம் முதல் 180 நாட்களுக்கு ‘அரசியலமைப்பு நிர்ணய சபையாக’ செயல்பட்டு புதிய மாற்றங்களைச் சட்டமாக்கும்.
இந்த பொது வாக்கெடுப்பு பங்களாதேஷில் மீண்டும் ஒரு சர்வாதிகார ஆட்சி உருவாகாமல் தடுப்பதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

