Business
oi-Vigneshkumar
மும்பை: Gen Z இளைஞர்கள் கடந்த மாதம் ஒட்டுமொத்த உலகிற்கும் அவர்களின் போராட்ட குணத்தை காட்டினார்கள். இதற்கு முந்தைய தலைமுறைகளில் இருந்து Gen Z இளைஞர்கள் மாறுபட்டு இருக்கிறார்கள் என பலரும் புகழ்ந்திருந்தனர். இப்படி மற்ற விஷயங்களில் கலக்கினாலும் ஒரு குறிப்பிட்ட பழக்கம் மட்டும் மிகவும் கவலை தருவதாக இருக்கிறது. அதுதான் கடன்கள்.
முன்பெல்லாம் ஒரு கடன் வாங்கவே 10008 முறை யோசிப்பார்கள். ஆனால், இப்போது இளைஞர்கள் மிக அதிகளவில் கடன் வாங்குகிறார்கள். வீடு கடன், கல்வி கடன், தொழிலை மேம்படுத்த கடன் என்பது போய் இப்போது கடன் வாங்கி டிரிப் போவது, தேவையில்லாத பொருட்களை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

கடன்கள்
குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா, ஷாப்பிங் அவ்வளவு ஏன் இசைக்கச்சேரி செல்லக்கூட கிரெடிட் கார்டு, தனிநபர் கடன், பை நவ் பே லேட்டர் மூலம் கடன் வாங்குவதை ஒரு வேலையாகவே வைத்திருக்கிறார்கள். அப்படி தான் சமீபத்தில் மும்பையை சேர்ந்த இரண்டு பெண்கள் தென் கொரியாவின் புசான் நகருக்கு பிடிஎஸ் இசை கச்சேரியை பார்க்க சென்றுள்ளனர். இந்த பயணத்தின் மொத்த செலவையும் கிரெடிட் கார்டு மூலமே செய்துள்ளனர்.
அதேபோல் மற்றொரு இளம் தம்பதி கடந்த ஆண்டு தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றபோது, தங்களது பட்ஜெட்டை அதிகமாக கிரெடிட் கார்டில் செலவு செய்துள்ளனர். பின்னர் அந்த கடனை சமாளிக்க புதிய கடன் என கடன் சுழலில் சிக்கியுள்ளனர். இது ஏதோ இந்த ஒரு தம்பதியின் நிலை மட்டும் இல்லை. இந்த காலத்தில் பலரும் செய்யும் தவறாக இதுவே இருக்கிறது.
சின்ன விஷயங்களுக்கும் கடன்
இப்போது இந்திய குடும்பங்களின் மொத்த கடனில் வீட்டு கடன் இல்லாத இதர கடன்கள் பாதிக்கும் மேல் உள்ளன. அதாவது வீடு என்பது பெரிய முதலீடு முன்பெல்லாம் அதற்கு தான் கடன் வாங்குவார்கள். ஆனால், இப்போது அதை விட மற்ற சின்ன சின்ன விஷங்களுக்கும் கடன் வாங்குகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.தங்க நகைகளுக்கு எதிரான கடன் நிலுவை தொகை, மார்ச் 2022ல் ரூ.74,738 கோடியாக இருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் அது ரூ.4.61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பெர்சனல் லோனும் கூட இதே காலகட்டத்தில் ரூ.9.02 லட்சம் கோடியிலிருந்து ரூ.17.32 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கடன் வாங்குவோரின் எண்ணிக்கை 11%ஆக இருந்தது. ஆனால், இப்போது அது 28%ஆக அதிகரித்துவிட்டதாக சிபில் அமைப்பு தெரிவித்துள்ளது. கடன் வாங்கும் வயதில் இருக்கும் சுமார் 89 கோடி பேரில், கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் கடந்த ஓராண்டில் மட்டும் கடன் பெற்றுள்ளார். இதில் கிட்டத்தட்டப் பாதி பேரிடம் நுகர்வு சார்ந்த கடன், அதாவது கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் மற்றும் கன்ஸ்யூமரபல் லோன் உள்ளன.
Gen Z
குறிப்பாக Gen Z தலைமுறையினர் இந்த மாற்றத்தின் முக்கிய காரணமாக உள்ளனர். 2000க்குப் பிறகு பிறந்தவர்களில் பலர் 22 வயதிலேயே கடன் உலகிற்குள் நுழைகின்றனர். சிறிய கடன்கள், கிரெடிட் கார்டுகள் மற்றும் பை நவ் பே லேட்டர் என ஏகப்பட்ட வழிகளில் ஜென் ஜீ கடன் வாங்குகிறார்களாம்!
குறிப்பாக இந்தியர்களின் கிரெடிட் கார்டு பயன்பாடு ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. நமது நாட்டில் கிரெடிட் கார்டு நிலுவை தொகை கடந்த நிதியாண்டில் ரூ.3 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. அதேநேரம் 90 முதல் 360 நாட்கள் வரை நிலுவையில் இருக்கும் கிரெடிட் கார்டு கடன்களின் அளவும் ஓராண்டில் 40%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இசைக்கச்சேரிக்கு கூட!
வெறும் பொருட்கள் வாங்குவதில் மட்டுமின்றி இசைக்கச்சேரி, சுற்றுலா செல்ல கூட அதிகளவில் இளைஞர்கள் கடன் வாங்குகிறார்களாம். மேலும், 2025ன் முதல் பாதியில் இந்தியாவில் எடுக்கப்பட்ட தனிநபர் கடன்களில் 25%க்கும் மேற்பட்டவை டிரிப் செல்லவே பயன்படுத்தப்பட்டதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். கடன் வாங்கி இதுபோல செலவழிக்கும் டிரெண்ட் அதிகரித்தே வருகிறது. இது ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.
இதுபோல Gen Z இளைஞர்கள் கடன் வாங்கி செலவு செய்வது நாட்டிற்கே பெரிய பிரச்சினையா என்றால் அப்படி எல்லாம் இல்லை. ஆநால், மாறி வரும் இந்த டிரெண்ட்டை நாம் சற்றஏ கவலையுடன் கவனிக்க வேண்டும். சிறிய சிறிய தொகைக்கும் கடன் வாங்குவது நம்மை பெரிய கடனில் சிக்க வைத்துவிடும். அதாவது இந்த பழக்கம் இந்திய நிதி அமைப்புக்கு உடனடி பெரிய ஆபத்து இல்லை என்றாலும், குறைந்த கிரெடிட் ரேட்டிங் கொண்டவர்கள் இந்த கடன்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டி இருப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
கவலை
இந்தியாவில் கடன் வளர்ச்சி என்பது அதிகரித்துள்ளது. ஆனால் அந்த கடன் வீடு, தொழில் போன்ற சொத்துகளை உருவாக்க பயன்படுவதில்லை. மாறாக இப்போதே அனுபவிக்கும் சின்ன சின்ன விஷயத்திற்காக அதை செலவிடுகிறார்கள். இது வரும் காலத்தில் குடும்பத்திற்கே அதிக சிக்கலை கொடுக்கலாம் என்பதே இப்போதைய கவலையாக இருக்கிறது.




