தமிழகத்தில், மகளிர் பெயரில் சொத்துக்கள் வாங்குவதை ஊக்குவிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், 10 லட்சம் ரூபாய் மதிப்பு வரை, மகளிர் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்து பத்திரங்களுக்கு, பதிவுக் கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சலுகை, ஏப்.1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் இச்சலுகைகளைப் பெற, 10 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாடுகள் அடிப்படையில், இச்சலுகை உரிய முறையில் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் நிர்வாக பணிக்கான மாவட்ட பதிவாளர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி யாரெல்லாம் பயன்பெறலாம்; யாரெல்லாம் பயன்பெறமுடியாது என்பது குறித்து கேள்வி பதில் வடிவில் பார்க்கலாம்.
கேள்வி: யார் யாருக்கு இந்த சலுகை பொருந்தும்?
பதில்: மகளிர் பெயரில் பதிவு செய்யப்படும், சொத்து விற்பனை பத்திரங்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.
கேள்வி: ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து வாங்கும் போது இந்த சலுகை பொருந்துமா?
பதில்: ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சொத்து கூட்டாக வாங்கும் போது, அனைவரும் பெண்களாக இருந்தால் மட்டுமே (குடும்பத்தைச் சேர்ந்த அல்லது சேராத, ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் கூட்டாக வாங்கினாலும் பொருந்தும்) இந்த சலுகை பொருந்தும்.
கேள்வி: கணவன், மனைவி இணைந்து வாங்கும்போது இந்த சலுகை செல்லுபடியாகுமா?
பதில்: கணவன், மனைவி கூட்டாக வாங்கினால், இந்த சலுகை பொருந்தாது.
கேள்வி: கூட்டாக வாங்குவதில் உள்ள விதிவிலக்கு என்ன?
பதில்: குடும்ப உறுப்பினர் அல்லாத ஆண்கள், பெண்களுடன் சேர்ந்து வாங்கும் சொத்து பத்திரத்துக்கும் இது பொருந்தாது.
கேள்வி: சலுகை அமலுக்கு முன்னர் தேதியிட்ட சொத்துகளுக்கு பொருந்துமா?
பதில்: இந்த சலுகை அமலுக்கு வந்த தேதிக்கு முன்பு, பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களுக்கு பொருந்தாது.
கேள்வி: சொத்தின் மதிப்பு எவ்வளவு இருக்க வேண்டும்?
பதில்: பதிவுக்காக பத்திரம் தாக்கல் செய்யப்படும் தேதியில், வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், சொத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும்.
கேள்வி: ஒரே இடத்தை பாகங்களாக பிரிக்கும் போது இந்த சலுகையை பயன்படுத்த இயலுமா?
பதில்: இந்த சலுகையை பெற, அதிக மதிப்புள்ள சொத்துக்களை, ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களாக பிரித்து, மகளிர் பெயரில் பதிவு செய்தாலும், இச்சலுகை பொருந்தாது.
கேள்வி: கட்டடத்துடன் கூடிய நிலத்திற்கு வரம்பு உள்ளதா?
பதில்: தாக்கல் செய்யப்படும் பத்திரத்தில், நிலத்தின் மதிப்பு மட்டும் 10 லட்சம் ரூபாய் எனக் காட்டி, அதில் கட்டட மதிப்பு அதிகமாக இருந்தால், இச்சலுகை பொருந்தாது.
கேள்வி: அடுக்குமாடி கட்டடம் வாங்கும் போது இருக்கும் சிறப்பு சலுகை என்ன?
பதில்: அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில், ஒரு பெண் பெயரில், எத்தனை வீடுகள் தனித்தனியே வாங்கினாலும், ஒவ்வொன்றின் மதிப்பும் 10 லட்சம் ரூபாய்க்குள் வரும் நிலையில், இந்த சலுகை பொருந்தும்.
கேள்வி: ஒரு மனைப்பிரிவில் எத்தனை மனைகளுக்கு சலுகை கட்டணம் பெற இயலும்?
பதில்: ஒரு மனைப்பிரிவில் 10 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள, ஒவ்வொரு மனையையும் தனித்தனியே ஒரே பெண் பெயரில் வாங்கினாலும், இந்த சலுகை பொருந்தும்.
April 03, 2025 5:04 PM IST
கணவன், மனைவி இணைந்து சொத்து வாங்கினால் 1% கட்டண சலுகை கிடைக்குமா? – சந்தேகங்களும் விளக்கமும்! | FAQ