Last Updated:
மத்திய அமைச்சர் அமித் ஷா, News 18 தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பேட்டியில், விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
நியூஸ் 18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரத்யேக பேட்டியளித்தார். அதில் விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதா என்ற கேள்விக்கு அமித் ஷா பதில் அளித்தார்.
தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். பாஜக விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அமித் ஷா, நாங்கள் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவுபடுத்த விரும்புகிறோம். என்ன முடிவுகள் எடுக்கப்பட்டாலும் தேசிய ஜனநாயக கூட்டணியினுடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றாக அமர்ந்து அதனை எடுக்கும் என்றார்.
மேலும் அப்படி எனில் பேச்சுவார்த்தையை நீங்கள் மறுக்கவில்லையா என்ற கேள்விக்கு அவருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பதையும் நான் கூறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து வெற்றியை முடிவு செய்வோம் என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் விஜயுடன் பேச முயற்சித்து வருகிறதே? என்ற கேள்விக்கு அனைவரும் பேச முயற்சிப்பதில் என்ன தவறு உள்ளது என்றார்.
பிகார் சட்டப்பேரவை தேர்தல் குறித்த பல்வேறு கேள்விகளுக்கும் அமைச்சர் அமித் ஷா பதில் அளித்தார். பிகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர் ஆவார்கள் என்று கேள்விக்கு, மகாபந்தன் கூட்டணிக்குள் நடக்கும் “வாரிசு” அரசியலை அமித் ஷா கடுமையாக சாடினார். ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வி யாதவ் பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார் . காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்.
பீகாரிலும் சரி, டெல்லியிலும் சரி, அதற்கான இடம் இல்லை என்பதை நான் இருவருக்கும் சொல்ல விரும்புகிறேன்; டெல்லியில் பிரதமர் மோடி இருக்கிறார், பீகாரில் நிதிஷ் குமார் இருக்கிறார். பிகாரில் நிதிஷ் குமாரின் கீழ் தேர்தல் நடத்தப்படுகிறது என்பதை அவர் தெளிவாகக் கூறியிருப்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
October 29, 2025 10:53 PM IST


