ஷேக் ஹசீனா வங்கதேச அரசியலுக்கு திரும்ப மாட்டார் என அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் உறுதிபடுத்தியுள்ளார்.
வங்கதேசத்தில் பல ஆண்டுகளாக புகைந்து கொண்டிருந்த போராட்டங்கள் தற்போது அடுத்தடுத்து வெடித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கொடுக்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கீடுதான்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும் அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், மாணவர்கள் போராட்டத்தை தீவிரப் படுத்தினர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்த நிலையில், ஒரு சில இடங்களில் அது வன்முறையாக வெடித்தது. இதனை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லியில் தஞ்சம் புகுந்துள்ளார்.
மேலும் தெரிந்துகொள்ள:
பிரதமர் தலைமறைவு… ராணுவ ஆட்சி… வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?
இந்நிலையில் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் அளித்த பேட்டியில், வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னரும் நாட்டை விட்டு வெளியேற ஷேக் ஹசீனா விரும்பவில்லை என விளக்கமளித்தார்.
வன்முறை முற்றிய நிலையில் அவர் நாட்டில் தங்குவது பாதுகாப்பானது அல்ல என்று குடும்பத்தினர் வலியுறுத்தியதன் பேரிலேயே அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறியதாகவும், இந்த வன்முறை விரைவில் முடிவுக்கு வரும் என்று நினைக்க வேண்டாம் என்றும் கூறினார்.
இந்த சூழலில் வங்கதேசத்தின் பெரும்பான்மையான மக்கள் அமைதியாக இருப்பது தனக்கு மிகுந்த மனவருத்தத்தை தருவதாக குறிப்பிட்டார். மேலும், வங்கதேசத்தில் விரைவில் தேர்தல் நடக்கும் என்று நம்பும் வேளையில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடக்கும் என்று நினைக்கவில்லை என்று தெரிவித்ததோடு ஷேக் ஹசீனா மீண்டும் அரசியலுக்கு திரும்ப மாட்டார் எனக் கூறினார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
