பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் தலைமையகங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 9 இலக்குகள் மீது இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 14 நாட்களுக்கு பிறகு நடந்த பதில் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மசூத் அசாரின் குடும்பத்தினரின் 10 பேர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பதில் தாக்குதல் ‘போர் நடவடிக்கை’ என விமர்சித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் எதிரிகளுக்கு உரிய பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ஆயுத படைகளுக்கு தெரியும் எனக் கூறினார். இதனால் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ‘இந்தியா இனி தாக்குதலை நடத்தினால் மட்டுமே பதில் தாக்குதல் நடத்தப்படும்’ என தெரிவித்தார். இதனால், இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துமா?, அதனால் போர் உருவாக வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நியூஸ்18க்கு பேசியுள்ள இந்திய ராணுவத்தின் முன்னாள் உளவுப் பிரிவு அதிகாரி சுப்ரமணி, “பாகிஸ்தான் மக்கள் மீதோ, ராணுவம் மீதோ தாக்குதல் நடத்தவில்லை என்று இந்திய அரசு தெளிவாக கூறியுள்ளது. இந்தியாவின் டார்கெட் இந்தியா மீது தீவிரவாத தாக்குதலை அரங்கேற்றும் தீவிரவாத குழுக்களின் கட்டமைப்புகள் மட்டுமே. பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி மட்டுமே கொடுத்திருக்கிறது.
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க வாய்ப்பிருக்கிறதா என்றால் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால், உள்நாட்டு பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடி ஆகிய சிக்கலில் உள்ள பாகிஸ்தான் என்றைக்கும் ஒரு போரை நடத்த முன்வரமாட்டார்கள். ஆனால், எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல் போன்ற மறைமுக போரை நடத்த அதிக வாய்ப்புள்ளது. அதற்கான கட்டமைப்பும் பாகிஸ்தானிடம் உள்ளது.
நேற்றிரவே இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இதில் இந்தியர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். இப்படித்தான் பாகிஸ்தான் மறைமுக போரை நடத்தும். ஆனால், நேரடி போரை பாகிஸ்தான் என்றைக்கும் நடத்தாது. அந்த அளவுக்கு அந்த நாட்டில் உள்நாட்டு சிக்கல்கள் அதிகமாகியுள்ளன. பலூசிஸ்தான் உட்பட பல பிரச்சினைகள் உள்ளன. மேலும் பாகிஸ்தான் மக்கள் அங்குள்ள அரசு மீதும் ராணுவம் மீதும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் இந்தியாவுடன் பாகிஸ்தான் நேரடி போரை நடத்த வாய்ப்பேயில்லை. அத்தனையும் மீறி போர் தொடுக்க நினைத்தால் பாகிஸ்தானுக்கு என்ன ஆபத்து ஏற்படும் என்பது அந்நாட்டினருக்கே நன்றாக தெரியும்.
மேலும், இந்தியா என்றைக்கும் எந்த இடத்திலும் போர் என்கிற வார்த்தையை பயன்படுத்தியதில்லை. காரணம் இந்தியா மீது நடத்தப்படுவது தீவிரவாத தாக்குதல் மட்டுமே. அதனால் தான் போர் வார்த்தையை தவிர்த்து இந்தியாவின் டார்கெட் முழுவதும் தீவிரவாதிகளை குறிவைத்தே உள்ளது. அதனடிப்படையில் தான் இன்றைய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தியா போரை விரும்பியிருந்தால் பஹல்காம் தாக்குதல் நடந்த 2 நாட்களில் இந்தியா தாக்குதலை நடத்தியிருக்கும். மாறாக அப்படி செய்யாமல், 14 நாட்களுக்கு பிறகு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களை தாக்கியிருக்கிறது இந்தியா.
ஒருவேளை பாகிஸ்தான் இதன்பின் இந்திய மக்கள் மீதோ குடியிருப்புகள் மீதோ தாக்குதல் நடத்தும் பட்சத்தில் மத்திய அரசு இதனை ஐநாவிடம் முறையிடும் வாய்ப்பு உள்ளது. அதன்மூலம் இந்தியாவுக்கு கிடைக்கும் ஆதரவு பெருகும். மேலும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி அது போர் சூழ்நிலையாக மாறும்பட்சத்தில் அந்நாட்டுக்கு கிடைக்கக்கூடிய சர்வதேச நிதியை இந்தியா தடுக்க முடியும். பல நாடுகள் பாகிஸ்தான் மீது பொருளாதார தடையை விதிக்கலாம். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள அந்நாட்டுக்கு இது மேலும் சிக்கலை அதிகரிக்கும். இதனால் இந்த சூழலில் பாகிஸ்தான் நேரடி போரை தொடங்க வாய்ப்பில்லை.
எனினும் அந்நாட்டு அரசு இந்தியாவின் தனிமையான பகுதிகள் அல்லது காடுகள் மீது தாக்குதல் நடத்தி நாங்களும் இந்தியா மீது தாக்குதல் நடத்தினோம் என பாகிஸ்தான் மக்களை நம்ப வைக்க முயற்சிக்கலாம். அது வேண்டுமானால் நடக்க வாய்ப்பிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Exclusive | இந்தியா மீது பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தாது.. இதுதான் காரணம் – முன்னாள் அதிகாரி சொன்ன லாஜிக்!

