இந்த அறிவிப்பு, ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) 73-வது ஆண்டு விழா நிகழ்ச்சியின்போது, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா அவர்களால் வெளியிடப்பட்டது. அவர் கூறியதாவது, “EPFO அமைப்பு இந்திய தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புக்கான வலுவான நம்பிக்கையின் பிரதிபலிப்பாக உள்ளது. இந்த புதிய திட்டம், ஊழியர்களின் பாதுகாப்பையும், நிறுவனங்களின் பொறுப்பையும் ஒரே நேரத்தில் வலுப்படுத்தும்” என்றார்.
இந்த திட்டம் நவம்பர் 1, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. முதலாளிகள் தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தகுதியான ஊழியர்களையும் அறிவித்து, ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பதிவு செய்ய அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டம் முதன்முதலில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் அக்டோபர் 13, 2025 அன்று அறிவிக்கப்பட்டது. அதன் முக்கிய குறிப்புகள் பின்வருமாறு:
- இந்த திட்டம் நவம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வந்தது.
- ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர ஏற்பாடுகள் சட்டம், 1952 (EPF Act, 1952)இன் கீழ் இது செயல்படுகிறது.
- கடந்த மாதங்களில் பிஎஃப் தொகை செலுத்தப்படவில்லை என்றால், அதை இப்போது திரும்ப செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
- மாறாக, முதலாளிகள் ரூ.100 அபராதம் மட்டும் செலுத்த வேண்டும்.
- ஜூலை 1, 2017 முதல் அக்டோபர் 31, 2025 வரை சேர்ந்த ஆனால், EPF-ல் பதிவு செய்யப்படாத ஊழியர்களுக்கே இந்தத் திட்டம் பொருந்தும்.
அதாவது, இதன்மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் வேலைக்கு சேர்ந்தும், ஏதேனும் காரணங்களால் PF கணக்கில் சேர்க்கப்படாத ஊழியர்களை, நிறுவனங்கள் இப்போது எந்த பெரிய அபராதமுமின்றி பதிவு செய்யலாம்.
இந்தத் திட்டத்தின்கீழ் பின்வரும் நபர்கள் பயனடையலாம்.
1. ஜூலை 1, 2017 முதல் அக்டோபர் 31, 2025 வரை நிறுவனத்தில் சேர்ந்தவர்கள்.
2. நிறுவனம் இந்த அறிவிப்பை தாக்கல் செய்யும் நாளில் அவர்கள், இன்னும் பணியில் இருப்பவர்களாகவும், உயிருடன் இருப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
மேலும், சில முக்கிய குறிப்புகள்:
- சில EPF விதிகள் தொடர்பான விசாரணைகள் நடந்தாலும், அதனால் இந்தத் திட்டத்தின் நன்மைகளை பெறுவதில் நிறுவனங்களுக்கு எந்தத் தடையும் இருக்காது.
- எனவே, நிறுவனங்கள் ரூ.100 அபராதம் மற்றும் தங்களது PF பங்களிப்பு மட்டுமே செலுத்த வேண்டும்.
- இந்த அறிவிப்பு தேதிக்கு முன்பு நிறுவனத்தை விட்டு வெளியேறிய ஊழியர்களுக்காக, EPFO எந்த நடவடிக்கையும் எடுக்காது.
இந்த திட்டம் பல முக்கிய நன்மைகளை வழங்குகிறது:
1. முறையான வேலைவாய்ப்புகளில் மேலும் பல ஊழியர்களை இணைக்க உதவும்.
2. தொழில் செய்வதற்கு ஏற்ற எளிதான சூழலை உருவாக்கும்.
3. இந்தத் திட்டம் நிறுவனங்கள் EPF விதிகளை சரியாகக் கடைப்பிடிக்க உதவுகிறது.
4. இது தொழிலாளர்களின் பாதுகாப்பையும், எதிர்கால நிதி நிலைத்தன்மையையும் வலுப்படுத்துகிறது.
அதே நேரத்தில், அரசு EPF கவரேஜை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. அதில் முக்கியமானது, சம்பள வரம்பை ரூ.15,000லிருந்து ரூ.25,000ஆக உயர்த்தும் திட்டமாகும். இது, மேலும் பல ஊழியர்களை வருங்கால வைப்பு நிதி வலையமைப்புக்குள் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
November 05, 2025 4:11 PM IST

