Last Updated:
சிங்கப்பூர், வங்கதேசம், மலேசியா போன்ற நாடுகள் பொது அலுவலகங்களில் ஏசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்தியுள்ளன.
2026-ஆம் ஆண்டு உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எரிசக்தி சேமிப்பு மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் குறித்து விடுத்த வேண்டுகோளுக்கு பாராட்டுகள் குவிந்துள்ள்ன. மேலும் பிரதமரின் வேண்டுகோள், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே என்பதைச் சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோள் தனித்துவமானது என்றோ அல்லது மிகையானது என்றோ கருதத் தேவையில்லை; ஏனெனில் உலகம் முழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே இத்தகைய அவசரகால நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகின் முன்னணி நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளன. சுமார் 18 நாடுகள் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வாகனக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இதில் ‘ஒற்றை-இரட்டை’ (Odd-Even) இலக்க வாகன முறை, பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்தல் மற்றும் அரசு வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் போன்றவை அடங்கும். உதாரணமாக, பாகிஸ்தான் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை மற்றும் 50 சதவீத ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை (WFH) முறையை அமல்படுத்தியுள்ளது. இலங்கை மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளும் குறிப்பிட்ட நாட்களில் அரசு அலுவலகங்களை மூடி எரிசக்தியைச் சேமிக்கின்றன.
மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க பல நாடுகள் ஏசி (AC) வெப்பநிலையை 24°C முதல் 26°C வரை இருக்குமாறு கட்டாயமாக்கியுள்ளன. சிங்கப்பூர், வங்கதேசம், மலேசியா போன்ற நாடுகள் பொது அலுவலகங்களில் ஏசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்தியுள்ளன.
எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க இலங்கை ‘கியூஆர் கோடு’ (QR Code) மூலம் எரிபொருள் ரேஷன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மாலத்தீவு மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் பாதியை மட்டுமே நிரப்பி விநியோகிக்கும் முறையைப் பின்பற்றி வருகின்றன.
நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள், பெட்ரோலிய எரிபொருளில் இருந்து மின்சார எரிபொருளுக்கு (EV) மாற ஊக்குவிப்புத் தொகைகளையும், சூரிய ஒளி மின்சாரம் மற்றும் ‘ஹீட் பம்ப்’ (Heat Pump) அமைப்புகளுக்கு மானியங்களையும் வழங்கி வருகின்றன. எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகள் விளம்பரப் பலகைகளுக்கான மின்சாரத்தை அணைத்து வைக்க உத்தரவிட்டுள்ளன. பல நாடுகள் பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அல்லது ஆன்லைன் வகுப்புகளை அறிவித்து பயணங்களைக் குறைத்துள்ளன.
இவற்றின் அடிப்படையில் 2026-ன் இந்த எரிசக்தி சவாலைச் சமாளிக்க உலகம் முழுவதும் ஒருமித்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவின் இந்தச் சிக்கன நடவடிக்கைகள், உலகளாவிய இந்த நெருக்கடி காலத்தில் நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க எடுக்கப்பட்ட ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு நாட்டு மக்களிடையே வரவேற்பும் பாராட்டும் குவிந்து வருகிறது.


