Last Updated:
Eid Al Adha: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே சத்திரம் என்ற இடத்தில் குர்பானிக்காக ஆடு சந்தை வருடா வருடம் நடத்தப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகின்ற ஜூன் 7ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இறைத் தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை உணர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாள்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ் மாதத்தின் 10ஆம் நாள் பக்ரீத் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளைப் பலியிட்டு இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே சத்திரம் என்ற இடத்தில் குர்பானிக்காக ஆடு சந்தை வருடா வருடம் நடத்தப்படுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு வந்து குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து குர்பானி ஆடுகள் விற்பனையாளர் கூறுகையில், “ஆடுகளை வாங்குவதற்கு பக்ரீத் வருவதற்கு 15 நாட்கள் முன்பாகவே கூட்டம் அதிகமாக இருக்கும். ஆடுகள் அனைத்தும் ரூ.8000 முதல் ரூ.25,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. கடைசி மூன்று நாட்கள் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
இந்த ஆடுகளை மன்னார்குடி சந்தை, ஜெயங்கொண்டம் சந்தை, திருவாஞ்சூர் சந்தை, வேலூர் சந்தை, திருவண்ணாமலை சந்தை, மதுரை சந்தை போன்ற பகுதிகளில் இருந்து வாங்கி வருகிறோம்.
பக்ரீத் பண்டிகைக்குத் தகுதி உள்ள ஆடுகள் 1 வருடம் பூர்த்தி ஆன ஆடுகள், நோய் இல்லாமல் இருக்கும் ஆடுகள், காயங்கள் ஏற்படாத ஆடுகள், கொழுத்த ஆடுகளாகப் பார்த்து வாங்கிச் செல்வர். இந்த 15 நாட்கள் வியாபாரத்தில் நாங்கள் முதலீடு செய்ததைவிட இரு மடங்கு லாபம் எடுத்து விடுவோம்” எனத் தெரிவித்தார்.
Mayiladuthurai,Nagapattinam,Tamil Nadu
June 04, 2025 12:48 PM IST

