Last Updated:
இந்திய அணியின் ஸ்பான்சர்ஷிப்பை பெற பல முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து ட்ரீம் 11 விலகியதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. இதை அடுத்து புதிய ஸ்பான்சரை விரைவில் பிசிசிஐ முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக ட்ரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஜூலை மாதம் ஒப்பந்தம் ஏற்படுத்தி இருந்தது. சுமார் 358 கோடி ரூபாய்க்கு இந்த ஸ்பான்சர்ஷிப்பை கடும் போட்டிக்கு மத்தியில் ட்ரீம் 11 நிறுவனம் கைப்பற்றி இருந்தது.
அந்த வகையில் இந்திய அணி விளையாடும் ஒரு சர்வதேச போட்டிக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் என்ற கணக்கில் இந்திய வீரர்களின் ஜெர்சியில் ட்ரீம் 11 நிறுவனம் இடம் பெற்றிருந்தது. இதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய விளம்பரம் கிடைத்து வந்தது.
அதற்கு முன்பாக இந்திய அணியின் ஸ்பான்சராக பைஜூஸ் நிறுவனம் இருந்து வந்தது. இந்நிலையில் 3 ஆண்டுகள் கடந்துள்ள சூழலில் ட்ரீம் 11 நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவடைந்து உள்ளது. அந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பதற்கு ட்ரீம் 11 தரப்பிலிருந்து ஆர்வம் காட்டப்படவில்லை.
புதிய ஸ்பான்சர்ஷிப்பை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. கால்பந்துக்கு அடுத்தபடியாக உலகில் மிகப்பெரிய சந்தை மதிப்பை கொண்டதாக பிசிசிஐ மற்றும் இந்திய அணி உள்ளது.
August 25, 2025 1:24 PM IST


