இந்த சுரங்கப்பாதைகள் இருண்டதாகவும், குறுகலாகவும் இருக்கும். இந்த சுரங்கப்பாதையில், Rattle snake எனப்படும் விஷப்பாம்புகள், விஷப் பூச்சிகள், எலிகள், வெப்பம் போன்ற ஆபத்துகள் நிறைந்திருக்கின்றன. இந்த சுரங்கப்பாதை வழியாக அமெரிக்காவிற்குள் செல்வதற்கு, அங்கிருக்கும் வணிகக் குழுவுக்கு (Cartel) 6,000 டாலர் (சுமார் 5.25 லட்சம்) வரை கொடுக்க வேண்டும். அந்தப் பணம் செலுத்தியவுடன், அமெரிக்காவுக்குள் நுழையவிருக்கும் அந்த புலம்பெயர்வோருக்கு, ஒரு குறியீடு வழங்கப்படுகிறது. அந்தக் குறியீடு மூலம், மெக்சிகோவில் உள்ள பிற வணிகக் குழு மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களால் அவர்கள் துன்புறுத்தப்படுவதில்லை எனவும், அவர்கள் எளிதாக அமெரிக்காவிற்குள் ஊடுருவ வழிவகை செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
பல மாதங்களாக விமானங்கள், பேருந்துகள், சரக்கு வாகனங்கள், நீண்ட காடுகள், மலைகள் வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய விரும்பும் ஒருவர் பெரும் பொருளாதாரத்தை இழக்க நேரிடுகிறது. குஜராத் காவல்துறையின் கூற்றுப்படி, தென் அமெரிக்காவிலிருந்து அமெரிக்காவின் தெற்கு எல்லையை அடைய ஒருவருக்கு தலா ரூ.40 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை ஏஜெண்ட்களுக்கு பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. சட்டவிரோத குடியேற்றத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு ஏஜெண்ட்கள் இணைந்து இந்த வலையமைப்பில் மிகச் சாதுரியமாக இயங்கிவருகின்றனர். சிறு கிராமங்களில் தொடங்கி, சர்வதேச அளவில் பணிபுரியும் ஒரு ஒருங்கிணைந்த குழு இதற்குப் பின்னணியில் உஷாராக செயல்படுகிறது.

