Last Updated:
அமெரிக்கா அதிபர் டிரம்ப் தக்காளி, தேங்காய், வாழைப்பழம், காபி, மாட்டிறைச்சி உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரியை ரத்து செய்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
அமெரிக்காவில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக தக்காளி, தேங்காய், வாழைப்பழம், காபி, மாட்டிறைச்சி உள்ளிட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கப் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவும் அதே அளவில் வரி விதிக்கும் பரஸ்பர வரி விதிப்பு முறையை அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தினார். இந்த வரி விதிப்பால் அமெரிக்காவில் உணவுப் பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
பிரேசில் போன்ற நாடுகளிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதிக்கு விதித்த வரிகள் காரணமாக அமெரிக்காவில் மாட்டிறைச்சிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. செயற்கையாக மாட்டிறைச்சி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இஷ்டத்திற்கு விலையை உயர்த்தும் இறைச்சி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் தக்காளி, தேங்காய், வாழைப்பழம், காபி, அவகோடா, மாம்பழம், மாட்டிறைச்சி உள்ளிட்டவைகளுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டம், நியூயார்க் மேயர் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தது போன்ற காரணங்களால் அதிபர் டிரம்ப் தனது வரி கொள்கையை மாற்றத் தொடங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
November 16, 2025 7:26 AM IST


