Last Updated:
டெல்லி செங்கோட்டை அருகே Hyundai i-20 கார் வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம். தேஜஸ்வி யாதவ் தேசிய பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு விபத்து குறித்து பேசியுள்ள ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ், “இந்தியர்கள் எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் கேட் 1 அருகே நடந்த கார் வெடிகுண்டு விபத்தில் இதுவரை 13 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நியூஸ்18க்கு கிடைத்த தகவலின்படி இந்த கார் வெடிகுண்டு விபத்து தீவிரவாத தாக்குதல் எனச் சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் நடந்ததும், மத்திய உள்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அமித்ஷா, மாலை 7 மணிக்கு ஹுண்டாய் ஐ-20 கார் வெடித்து இந்தச் சம்பவம் நடந்தது என்றும் அடுத்தடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து நேரடியாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களைச் சந்தித்தார். அதன்பின் சம்பவ இடத்திற்குச் செல்ல இருக்கிறார்.
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு விபத்துக்கு பிரதமர், முதலமைச்சர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிகார் முதலமைச்சர் வேட்பாளரும், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவருமான தேஜஸ்வி இது தொடர்பாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்த துயரச் செய்தி கிடைத்தது. நாட்டின் தலைநகரில் நடந்த இதுபோன்ற ஒரு குண்டுவெடிப்பு மிகவும் கவலையளிக்கிறது, துயரத்தை அளிக்கிறது. இந்த வேதனையான சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
दिल्ली में लाल किला के पास हुए कार विस्फोट की दुःखद सूचना मिली। देश की राजधानी में ऐसे विस्फोट चिंताजनक और पीड़ादायक है। इस दर्दनाक हादसे में जिन परिवारों ने अपने निर्दोष प्रियजनों को खोया है, उनके प्रति गहरी संवेदनाएं व्यक्त करता हूँ तथा सभी घायलों के शीघ्र अति शीघ्र स्वस्थ होने… pic.twitter.com/U3ixGKC4OE
— Tejashwi Yadav (@yadavtejashwi) November 10, 2025
தேசிய பாதுகாப்பு விஷயங்களில் – அது புல்வாமாவாக இருந்தாலும் சரி, பஹல்காமாக இருந்தாலும் சரி – நாங்கள் அரசாங்கத்துடன் உறுதியாக நின்றோம். நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை விட வேறு எதுவும் முக்கியமில்லை.
இந்த விஷயத்தில் முழுமையான விசாரணை நடத்தி, நியாயமான மற்றும் வெளிப்படையான நடவடிக்கை மூலம் பொதுமக்களுக்கு உறுதியளிக்கவும், குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான பாடம் கற்பிக்கவும் மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியர்கள் எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வார்கள்? ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.
November 10, 2025 10:29 PM IST
Delhi Red Fort Blast | “புல்வாமா… பஹல்காம்.. இந்தியர்கள் எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வார்கள்?” – தேஜஸ்வி யாதவ்


