அமெரிக்காவால் நெதன்யாகுவிற்கு ஏற்பட்ட அவமானம்!
அமெரிக்க- ஈரான் இடையே தோஹாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை குலைக்கும் விதமாக, லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை டிரம்ப் பகிரங்கமாகக் கண்டித்து, போரை நிறுத்த உத்தரவிட்டது இஸ்ரேலுக்குக் கிடைத்த மிகப்பெரிய ராஜதந்திர அடியாகும்.
ஈரானை முழுமையாக முடக்குவதன் மூலம், அதன் நிதியுதவியில் இயங்கும் ஹெஸ்பொல்லா மற்றும் ஹமாஸ் ஆகிய அமைப்புகளைப் பிராந்தியத்தில் இருந்து முற்றிலும் துடைத்தெறிய இஸ்ரேல் மாபெரும் திட்டம் தீட்டியிருந்தது. தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம் லெபனான் எல்லை உட்பட அனைத்து முனைகளிலும் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. நெதன்யாகுவின் முதன்மை ராணுவ இலக்கு என்பது ஈரானை முடக்கி, அதன் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா மற்றும் ஹமாஸை ஒழிப்பதுதான். அமெரிக்கா- ஈரான் ஒப்புக்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் லெபனான் எல்லையில் போர் நிறுத்தப்பட்டுள்ளதால், முற்றிலும் அழியும் நிலையில் இருந்த ஹெஸ்பொல்லா தப்பியுள்ளது.
முற்றிலும் அழியும் நிலையில் இருந்த ஹெஸ்பொல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புகள், தங்களை மீண்டும் பலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுள்ளன. இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு நீண்டகால அச்சுறுத்தலாகும். “நாங்கள் நெதன்யாகுவின் ராணுவத்தை முறியடித்துவிட்டோம்” என்று ஹெஸ்பொல்லா பிரகடனம் செய்வது நெதன்யாகுவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தனிப்பட்ட அவமானமாகும். கடந்த சில ஆண்டுகளாக “ஆபிரகாம் உடன்படிக்கை” (Abraham Accords) மூலம் அரபு நாடுகளுடன் கைகோர்த்து, ஈரானுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க இஸ்ரேல் முயன்றது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
சாமர்த்தியமாக காய் நகர்த்திய கத்தார் பிரதமர்… சுக்குநூறான நெதன்யாகுவின் பிம்பம்!
ஆனால், அமெரிக்கா- ஈரான் போரினால் தங்களின் பொருளாதாரமும், ‘பாதுகாப்பான புகலிடம்’ என்ற பிம்பமும் சுக்குநூறானதால், அரபு நாடுகள் போரை உடனே நிறுத்தும்படி அமெரிக்காவுக்குக் கடுமையான அழுத்தம் கொடுத்தன. கத்தார் நாட்டின் பிரதமர் ஷேக் முகமது முன்னின்று இந்த ஒப்பந்தத்தை வரைந்ததன் மூலம், அரபு நாடுகள் இஸ்ரேலின் போர்க் கொள்கையை ஆதரிக்கவில்லை என்பதும், அவர்கள் ஈரானுடன் சுமுக உறவையே விரும்புகிறார்கள் என்பதும் தெளிவாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் வெளியானதில் இருந்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்திற்குள் கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன.
தீவிர வலதுசாரி அமைச்சர்கள், “ஈரானை அதன் அணுசக்தி இலக்குகளை அடையும் முன்பே ஒழித்துக்கட்டக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை அமெரிக்கா தடுத்துவிட்டது; இது இஸ்ரேலுக்குச் செய்யப்பட்ட துரோகம்” என்று கொந்தளித்து வருகின்றனர். இஸ்ரேலிய ஊடகங்களும் ராணுவ அதிகாரிகளும் தங்களின் நாடு பிராந்தியத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டதை ஒப்புக்கொண்டு விவாதங்களை நடத்தி வருகின்றனர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு அவரது நீண்டகால அரசியல் வாழ்க்கையிலேயே ஏற்பட்டுள்ள மிக மோசமான Personal and Strategic Setback- இது. “ஈரானை ஒழிப்பதே எனது வாழ்நாள் லட்சியம்” என்று பிரகடனப்படுத்தி வந்த நெதன்யாகு, தற்போதைய சூழ்நிலையால் உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
நெதன்யாகு மற்றும் கத்தார் பிரதமர்
இஸ்ரேல் அரசியலில் நெதன்யாகு பல தசாப்தங்களாகத் தன்னை “மிஸ்டர் செக்யூரிட்டி” என்ற பிம்பத்தின் மூலமே தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலில் இருந்து இஸ்ரேலைக் காக்க தன்னால் மட்டுமே முடியும் என்று அவர் தொடர்ந்து கூறி வந்தார். ஈரானின் அணு உலைகள் மற்றும் ராணுவ மையங்களை முற்றிலுமாக அழிக்க இரண்டு முறை தீவிர தாக்குதல் நடத்தியும், இறுதிப் புள்ளியில் ஈரானை ஒடுக்க முடியாமல் தோல்வியை தழுவியுள்ளார் நெதன்யாகு.
சொந்த நாட்டின் நலனுக்காக, நண்பர் நெதன்யாகுவை கைவிட்ட டிரம்ப்?
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த முந்தைய காலங்களில் நெதன்யாகுவின் மிக நெருங்கிய தனிப்பட்ட நண்பராகவும், இஸ்ரேலின் விசுவாசியாகவும் இருந்தார். டிரம்ப் தனது முதல் பதவி காலத்தில், பல தசாப்தங்களாக இருந்த அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை உடைத்து, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார். அமெரிக்கத் தூதரகத்தையும் அங்கு மாற்றினார். சிரியாவிடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றிய கோலான் குன்றுகள் மீதான இஸ்ரேலின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டார். நெதன்யாகுவின் வேண்டுகோளை ஏற்று, ஒபாமா காலத்தில் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அரபு நாடுகளான யுஏஇ, பஹ்ரைன் போன்றவற்றுடன் இஸ்ரேல் சுமுக உறவை ஏற்படுத்த ஆபிரகாம் உடன்படிக்கையை கொண்டு வந்தார். டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகதும் ஈரானை இருவரும் சேர்ந்து முடித்து விடலாம் என நெதன்யாகு கணக்கு போட்டார். ஆனால் நெதன்யாகுவின் கணக்குகள் பொய்த்து போகும் வகையில் டிரம்ப் தனது சொந்த நாட்டின் பொருளாதார நலனுக்காக நெதன்யாகுவின் பிடிவாதத்தைப் பொருட்படுத்தாமல் ஈரானுடன் கைகோர்த்துள்ளார்.
அரசியல் ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாகும் நெதன்யாகு!
நெதன்யாகுவின் தற்போதைய அரசாங்கம் தீவிர வலதுசாரி மற்றும் மதவாதக் கட்சிகளின் கூட்டணியை நம்பியே இயங்குகிறது. இத்தாமர் பென்-கிவிர் (Itamar Ben-Gvir) மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) போன்ற அமைச்சர்கள் “ஈரான் மற்றும் ஹெஸ்பொல்லாவை முழுமையாக அழிக்காமல் போரை நிறுத்தக் கூடாது” என்பதில் பிடிவாதமாக இருந்தனர். தற்போது அமெரிக்காவின் கட்டாயத்தால் நெதன்யாகு போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளதால், இந்த வலதுசாரி அமைச்சர்கள் அவரது அரசுக்குக் கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெறப் போவதாக மிரட்டத் தொடங்கியுள்ளனர். இதனால் நெதன்யாகுவின் பிரதமர் நாற்காலி எந்த நேரத்திலும் கவிழும் நிலை உருவாகியுள்ளது. நெதன்யாகு மீது இஸ்ரேல் நீதிமன்றங்களில் ஏற்கனவே பல ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் பிரதமராக இருக்கும் வரை மட்டுமே அவருக்குச் சட்டப்பூர்வப் பாதுகாப்பு கிடைக்கும்.
வழக்கு 1000 – சொகுசுப் பரிசுகள் விவகாரம்: இந்த வழக்கில் நெதன்யாகு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏமாற்றுதல் மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் அர்னான் மில்சன் (Arnon Milchan) மற்றும் ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் ஜேம்ஸ் பாக்கர் (James Packer) ஆகியோரிடமிருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள கியூபா Cigars-களை நெதன்யாகு பரிசாகப் பெற்றார். இதற்கு பதிலாக, அந்தத் தொழிலதிபர்களுக்கு அமெரிக்க விசா கிடைப்பதற்கும், இஸ்ரேலில் அவர்களுக்குச் சாதகமான வரிவிலக்கு சட்டங்களைக் கொண்டு வருவதற்கும் நெதன்யாகு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வழக்கு 2000 – ஊடகங்களுடன் ரகசிய உடன்பாடு: இஸ்ரேலின் பிரபல நாளிதழான ‘யெதியோத் அஹ்ரோனோத்’ (Yedioth Ahronoth)-இன் உரிமையாளர் அர்னான் மோசசை (Arnon Mozes) தனக்கு ஆதரவாக செய்தி வெளியிட உத்தரவிட்டார். இவர்களின் உரையாடல் அடங்கிய ஆடியோ ஆதாரங்கள் சிக்கியதால் இந்த வழக்கு வலுவடைந்தது.
வழக்கு 4000 – தொலைத்தொடர்பு ஊழல்: நெதன்யாகு மீதான வழக்குகளிலேயே இது தான் மிகவும் கடுமையானதாகக் கருதப்படுகிறது. நெதன்யாகு தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, ‘வல்லா’ (Walla) என்ற முன்னணி செய்தி இணையதளத்தின் உரிமையாளரை, நெதன்யாகு பற்றி சாதகமான செய்திகளை மட்டுமே வெளியிடுமாறு நெதன்யாகு தரப்பு கட்டாயப்படுத்தியது. இந்த வழக்கில் நெதன்யாகுவின் முன்னாள் அதிகாரிகளே அவருக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர்.
சிறைக்கு போகும் நெதன்யாகு?
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் நெதன்யாகு, தன்னை அரசியல் ரீதியாக ஒழிக்க ஊடகங்களும், காவல்துறையும், இடதுசாரி அமைப்புகளும் இணைந்து நடத்தும் “Witch Hunt” என கூறி வருகிறார். இந்த வழக்குகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தால் போர் நிறுத்தப்பட்டு, அவரது கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால், இஸ்ரேலில் அடுத்த சில மாதங்களில் பொதுத்தேர்தல் வரும்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
போரை முடிவுக்குக் கொண்டுவந்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்த வரைவை சாத்தியமாக்கிய ஒற்றை மனிதர்: கத்தார் நாட்டின் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி (Sheikh Mohammed bin Abdulrahman Al Thani).
நெதன்யாகுவின் கனவை உடைத்த கத்தார் பிரதமர்!
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது தோஹாவில் உள்ள கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் இருவேறு அறைகளில் அமர்ந்திருந்த அமெரிக்க, ஈரானிய தூதர்கள் ஒருவரையொருவர் நேருக்கு நேர் சந்திக்கக்கூட மறுத்தனர். வெளியுறவு அமைச்சக வளாகத்தில் இரு வேறு விஐபி மாநாட்டு அரங்குகளில் இரு குழுக்களும் தனித்தனியாக அமரவைக்கப்பட்டிருந்தன.
இந்த இரு அறைகளுக்கும் இடைப்பட்ட தூரம் தோராயமாக அரை கிலோ மீட்டர். அமெரிக்க- ஈரான் பிரதிநிதிகள் சந்தித்துக்கொள்ள கூடாது என்பதற்காகவே, உளவுத்துறைப் பாதுகாப்போடு இவ்வளவு தொலைவில் உள்ள அறைகள் திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டன. பேச்சுவார்த்தை தீவிரமடைந்த அந்த இறுதி 14 மணி நேரத்தில் கத்தார் பிரதமர் மற்றும் அவரது உதவியாளர்கள் இரு அறைகளுக்கும் இடையே 40-க்கும் மேற்பட்ட முறை நடந்து சென்று ஒப்பந்த வரைவை இறுதி செய்தனர்.
ஈரான் – அமெரிக்காவை சமாளித்தன் மூலம், அல் தானி சாதித்தது என்ன?
- ஒரு நாட்டின் பிரதமராகவும் வெளியுறவு அமைச்சராகவும் இருந்தபோதிலும், காரிடார்களில் அவரே கோப்புகளுடன் விறுவிறுப்பாக நடந்து சென்றது, தீர்க்கமான ஒரு முடிவை எட்ட உதவியதுதான் உலக ஊடகங்களால் Shuttle Diplomacy என்று ஆச்சரியத்துடன் வர்ணிக்கப்பட்டது. “பொருளாதாரத் தடைகளை நீக்காமல் பேச மாட்டோம்” என்ற ஈரானின் பிடிவாதத்தை உடைக்க, வெளிநாடுகளில் முடக்கப்பட்டிருந்த ஈரானின் சொத்துக்களில் சுமார் 1.20 லட்சம் கோடி ரூபாயை பேச்சுவார்த்தைக்கு முன்பே “அட்வான்ஸாக” விடுவிக்க அமெரிக்காவைச் சம்மதிக்க வைத்ததும் அல் தானிதான்.
- ஹார்முஸ் நீரிணைக்கு அல் தானி முன்வைத்த தீர்வும் பாராட்டப்படுகிறது. “நிபந்தனையற்ற திறந்த பாதை” என்ற அமெரிக்காவின் கோரிக்கையையும், “எங்கள் கடல் எல்லை” என்ற ஈரானின் பிடிவாதத்தையும் சமன் செய்ய, கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் Service Fees என்ற பெயரில் ஈரான் மறைமுகமாக வருவாய் ஈட்ட ஒரு சமரசப் புள்ளியை உருவாக்கினார்.
- ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஈரான் மறுத்ததால், இருதரப்புக்கும் பொதுவான ரஷ்யாவை Third-Party Custody-யாக உள்ளே கொண்டுவந்து, யுரேனியத்தை ரஷ்யாவிற்கு மாற்றுவதற்கான மாற்று வரைவை வடிவமைத்தார்.
- ஒப்பந்தம் இறுதி செய்யப்பட இரவில், இஸ்ரேல் லெபனானில் தாக்குதல் நடத்தியதால் ஈரான் பேச்சை முறிக்கப் பார்த்தது. உடனடியாக அமெரிக்க அதிபர் டிரம்பை தொடர்புகொண்டு, இஸ்ரேலைக் கட்டுப்படுத்தச் செய்து லெபனான் போர்நிறுத்தத்தையும் வரைவுக்குள் கொண்டு வந்தார்.
- அமெரிக்கா மற்றும் ஈரானின் ஆகிய இரு தரப்புமே “நாங்கள் தோற்கவில்லை” என்று தங்களின் நாட்டு மக்களிடம் காட்டிக்கொள்ளும் வகையில் Face-Saving ஒப்பந்தத்தை வடிவமைத்ததே அல் தானியின் மாபெரும் வெற்றியாகும்.
- அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தம் என்பது வெறும் ஒரு போர்நிறுத்தம் மட்டுமல்ல. மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய யுகத்தின் தொடக்கம். போரின் மூலம் மட்டுமே அமைதியைக் கொண்டுவர முடியும் என்று நம்பிய நெதன்யாகுவின் பிடிவாதம் தனிமைப்படுத்தப்பட்டுத் தோற்றுப் போயுள்ளது. அதே வேளையில், போரிடும் இரு தரப்பின் ஈகோவிற்கு இடையே சாதுரியமாகப் பாலமமைத்த கத்தார் பிரதமரின் சாந்தமான ராஜதந்திரம் உலகளாவிய பொருளாதாரப் பேரழிவைத் தடுத்து நிறுத்தி வெற்றியடைந்துள்ளது.
இறுதிப் புள்ளியில், ஆயுதங்களை விடவும் வார்த்தைகளுக்கே வலிமை அதிகம் என்பதை இந்த “புரிந்துணர்வு ஒப்பந்தம்” உலகிற்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

