சர்வதேச கடல் பகுதியில் இருந்த அமெரிக்காவின் மிக முக்கியமான மூன்று Destroyer கப்பல்களான யு.எஸ்.எஸ் ட்ரக்ஸ்டன் (USS Truxtun), யு.எஸ்.எஸ் ரஃபேல் பெரால்டா (USS Rafael Peralta), மற்றும் யு.எஸ்.எஸ் மேசன் (USS Mason) மீது ஈரானிய படைகள் தூண்டுதல் இன்றி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்காவின் CENTCOM தெரிவித்துள்ளது. இதில் USS Truxtun கப்பல் ஓமன் வளைகுடா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.
அமெரிக்க கடற்படையின் நடமாடும் கோட்டை.. சுவாரஸ்ய சினிமா பின்னணி!
பெரும்பொருட் செலவில் கட்டப்பட்ட யு.எஸ்.எஸ் ட்ரக்ஸ்டன் (USS Truxtun) அமெரிக்க கடற்படையின் Arleigh Burke-class வகையைச் சேர்ந்த Guided-missile Destroyer. இந்த கப்பலின் முழக்கம், “Pursue, Attack, Vanquish” என்பது. இந்தக் கப்பல் கடலில் ஒரு நடமாடும் கோட்டை போன்றே இருக்கும். இதில் ‘Tomahawk’ க்ரூஸ் ஏவுகணைகள், வான் பாதுகாப்பிற்கான ‘Standard’ ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகள் என சுமார் 96 ஏவுகணைகளை ஏவும் வசதி உள்ளது. பிப்ரவரி 3-ஆம் தேதி அமெரிக்காவின் நோர்ஃபோல்க் (Norfolk) தளத்திலிருந்து, ஈரான் மீதான தாக்குதலுக்கு Deploy செய்யப்பட்டது.
இந்தக் கப்பலுக்கு ஒரு சுவாரஸ்யமான சினிமா பின்னணியும் உண்டு. ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் (Tom Hanks) நடித்த புகழ்பெற்ற “Captain Phillips” திரைப்படத்தில், சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பலை மீட்கும் காட்சிகளில் உண்மையில் இந்த USS Truxtun கப்பல்தான் பயன்படுத்தப்பட்டது. தற்போது இந்தக் கப்பல் மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் மிக முக்கியமான பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டு வருகிறது.
நடுவானிலேயே அழிக்கப்பட்ட ஈரான் ஏவுகணைகள்!
இதன்மீது ஈரான் தனது கடற்கரைத் தளங்களில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic Missiles) மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை (Cruise Missiles) ஏவி ‘முப்பரிமாண’ தாக்குதலை நடத்தியுள்ளது. ஆனால், கப்பலில் இருந்த ‘ஏஜிஸ்’ (Aegis) பாதுகாப்பு அமைப்பு இந்த ஏவுகணைகளை நடுவானிலேயே தடுத்து அழித்ததாக கூறப்படுகிறது.
தற்கொலைத் தாக்குதல் நடத்தக்கூடிய பல Kamikaze drones-களை ஈரான் பயன்படுத்தியது. ஈரானின் புரட்சிகர காவல்படைக்கு சொந்தமான சிறிய மற்றும் அதிவேகப் படகுகள் USS Truxtun கப்பலைச் சூழ்ந்து தாக்கின. இந்த படகுகள் மிக நெருக்கமாக வந்ததால், அமெரிக்கக் கப்பலில் இருந்த வீரர்கள் கைத்துப்பாக்கிகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் (Small-caliber weapons) மூலம் பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது.
பாலிஸ்டிக் ஏவுகணைகள்
குறிவைக்கப்பட்ட ரஃபேல் பெரால்டா கப்பல்!
அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வானிலிருந்து ‘ஹெல்ஃபயர்’ ஏவுகணைகளை ஏவி ஈரானின் பல சிறிய படகுகளை மூழ்கடித்தன. இரு தரப்பினருக்குமான மோதல் பல மணி நேரம் நீடித்தது. ஈரானின் தாக்குதல் மிகவும் தீவிரமாக இருந்தபோதிலும், அமெரிக்காவின் அடுக்குமுறை பாதுகாப்பு காரணமாக கப்பலுக்கு ஒரு கீறல் கூட விழவில்லை என்கிறது அமெரிக்க தரப்பு. ஈரானின் அடுத்த இலக்காக இருந்தது ரஃபேல் பெரால்டா (USS Rafael Peralta). இந்த கப்பல், அமெரிக்க கடற்படையின் மிகவும் நவீனமான Destroyer-களில் ஒன்றாகும். Arleigh Burke-class ரகத்தைச் சேர்ந்த ‘Flight IIA’ மாடல். USS Truxtun-ஐ விட தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டது. 2004-ஆம் ஆண்டில், ஈராக் போரின் போது, சக வீரர்களைக் காக்கத் தன் உயிரைத் தியாகம் செய்த மெரைன் வீரர் ரஃபேல் பெரால்டா (Rafael Peralta) என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
இதில் ஏவுகணைகளைச் சுடும் வசதி மற்றும் அதிநவீன ‘Aegis Baseline 9’ போர் முறை உள்ளது. இது ஒரே நேரத்தில் வான்வழி மிரட்டல்களையும் ஏவுகணைகளையும் இடைமறிக்கும் திறன் கொண்டது. USS Rafael Peralta மீது ஈரான் மிகவும் ஆபத்தான முறையில் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரோன்களை ஒரு திசையிலும், அதிவேக ஏவுகணைகளை மற்றொரு திசையிலும் ஏவி கப்பலின் கவனத்தைத் திசைதிருப்ப ஈரான் முயன்ற நிலையில், ஈரானிய புரட்சிகர காவற்படையின் ஆயுதம் ஏந்திய சிறிய படகுகள் மிக அருகில் வந்து தாக்குதல் நடத்தின.
USS Rafael Peralta மீது ஈரான் மிகவும் ஆபத்தான முறையில் தாக்குதல்
இது ஒரு Saturation attack என்று கூறப்படுகிறது. அதாவது, கப்பலின் பாதுகாப்பு அமைப்புகளால் கையாள முடியாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான ஆயுதங்களை ஒரே நேரத்தில் ஏவி கப்பலைச் சேதப்படுத்துவதே ஈரானின் திட்டமாக இருந்தது. கப்பலில் இருந்த ‘SeaRam’ மற்றும் ‘Phalanx’ எனப்படும் தானியங்கி துப்பாக்கிகள், கப்பலை நோக்கி வந்த ட்ரோன்களை மிக நெருங்கிய தூரத்தில் வைத்து சுட்டு வீழ்த்தின.
குறிவைக்கப்பட்ட USS Mason… எதற்காக தெரியுமா?
USS Rafael Peralta தனது 5-இன்ச் பீரங்கிகளைப் பயன்படுத்தி, அச்சுறுத்தலாக வந்த ஈரானியப் படகுகளை விரட்டியடித்தது. கப்பலுக்கு சேதங்கள் ஏற்படவில்லை என்றும், கப்பலில் இருந்த வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் CENTCOM அறிவித்துள்ளது. ஈரான் தாக்குதலை எதிர்கொண்ட மற்றொரு கப்பல் USS Mason. அமெரிக்க கடற்படையின் புகழ்பெற்ற நியூட்டன் ஹென்றி மேசன் (Newton Henry Mason) என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்ட இந்தக் கப்பல், Arleigh Burke-class ரகத்தைச் சேர்ந்த Guided-missile Destroyer.
இந்தக்கப்பல் வான்வழித் தாக்குதல்களை முறியடிப்பதில் நீண்ட அனுபவம் கொண்டது. குறிப்பாக 2016 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைகளை வெற்றிகரமாக வீழ்த்திய பெருமை இதற்கு உண்டு. இதில் அதிநவீன Aegis போர் முறை மற்றும் SM-2, ESSM போன்ற ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் உள்ளன. மேலும், எதிரி ஏவுகணைகளைத் திசைதிருப்பும் ‘Nulka’ போன்ற மின்னணு போர்முறை கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. நேற்று USS Mason சந்தித்த தாக்குதல் மிகவும் சிக்கலானது.
ஈரான் ஒரே நேரத்தில் பல திசைகளிலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை USS Mason கப்பலை நோக்கி ஏவியது. ஏவுகணைகளோடு சேர்ந்து, குறைந்த உயரத்தில் பறந்து வரும் தற்கொலை வகை டிரோன்களை ஈரான் பயன்படுத்தியது.
அமெரிக்கா – ஈரான் பதற்றம்
ஈரானிய புரட்சிகர காவற்படையின் அதிவேகத் துப்பாக்கிப் படகுகள் USS Mason கப்பலை மிக நெருக்கமாகச் சூழ்ந்து கொண்டு, அதன் பயணப் பாதையை மறிக்க முயன்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த தாக்குதல்களை விட, மிகவும் கடுமையானதாக இருந்ததாக CENTCOM கூறியுள்ளது. USS Mason கப்பல் தனது Layered Defense மூலம் தாக்குதலை எதிர்கொண்டது. கப்பலில் இருந்த Close-In Weapon System எனப்படும் தானியங்கி துப்பாக்கிகள் டிரோன்களைச் சுட்டு வீழ்த்தின. கப்பலில் இருந்த Apache ஹெலிகாப்டர்கள் வானிலிருந்து ஏவுகணைகளை ஏவி, ஈரானியப் படகுகளை மூழ்கடித்தன.
“ஈரான் தாக்குதல்கள் வெறும் Love Tap போலத்தான்”
ஈரானின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் “பட்டாம்பூச்சிகள் தரையில் விழுவதைப் போல” கடலில் வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் தாக்குதல்கள் Love Tap போன்று மட்டுமே இருந்ததாகவும் டிரம்ப் கூறியுள்ளார். தற்போது இந்தக் கப்பல் ஹார்முஸ் நீரிணையில் சர்வதேசக் கடல் போக்குவரத்துப் பாதுகாப்பிற்காக தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானுக்குள் இருக்கும் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் டிரோன் கட்டுப்பாட்டு மையங்கள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த கடல் மோதல் குறித்து ஈரானும் அமெரிக்காவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.
அமெரிக்காதான் முதலில் போர்நிறுத்தத்தை மீறியதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அருகே ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பலை அமெரிக்கா தாக்கியதாகவும், கடற்கரைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் கூறுகிறது. இதன் காரணமாகவே அமெரிக்க கப்பல்கள் தாக்கப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இந்த மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

