குறிப்பாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தரைப்படை தலைமைத் தளபதி, மேஜர் ஜெனரல் முகமது பவ்பூர் (Mohammad Pakpour), ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அப்துல்ரஹீம் மௌசவி (Abdolrahim Mousavi), ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஜீஸ் நசீர்சாதே (Aziz Nasirzadeh), ஈரானிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ரியர் அட்மிரல் அலி ஷம்கானி (Ali Shamkhani) உள்ளிட்ட 48 உயரதிகாரிகள் தாக்குதலில் உயிரிழந்தனர். தாக்குதலில் அலி கமேனியின் குடியிருப்பு முற்றிலும் அழிக்கப்பட்டதால், அங்கிருந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். அலி கமேனியின் மனைவி மன்சூர் கமேனி, மகள், மருமகன் மற்றும் அவர்களின் 14 மாதக் குழந்தை, ஈரானின் தற்போதைய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் மனைவி, மகன் ஆகியோரும் கொல்லப்பட்டனர். மொஜ்தபா கமேனியும் தாக்குதலில் படுகாயமடைந்தார்.
மொஜ்தபா கமேனி
1979 புரட்சிக்குப் பிறகு, பதவியில் இருந்த ஒரு உச்ச தலைவர் வெளிநாட்டு ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதும், அதன் விளைவாக ஈரானின் உச்ச தலைமைத்துவக் கட்டமைப்பு ஒரு எதிர்பாராத போர்க்கால மாற்றத்தை எதிர்கொண்டதும் இதுவே முதல் முறையாகும். இதன் விளைவாக டெஹ்ரானில் உடனடியாக ஒரு அதிகார வெற்றிடம் ஏற்பட்டது. நாட்டின் விவகாரங்களைத் தற்காலிகமாக கவனிப்பதற்காக, Interim Leadership Council அமைக்கப்பட்டது. ஆட்சி அதிகாரச் சரிவைத் தடுக்க மூன்று பேர் கொண்ட Assembly of Experts செயல்பாட்டுக்கு வந்தது.
மார்ச் 7-ம் தேதி வாக்கில், மொஜ்தபாவின் உடல்நிலை சற்று சீரானதும், தற்காலிகக் கவுன்சிலின் பொறுப்பு முடிவுக்கு வந்து, மொஜ்தபா கமேனி ரகசியமாக உச்சத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1979-க்குப் பிறகு ஈரான் இஸ்லாமியக் குடியரசு எதிர்கொண்ட மிக பலவீனமான 7 நாட்கள் இந்த வாரம்தான். அது மட்டுமல்லாமல், அயதுல்லா அலி கமேனி கடுமையாக எதிர்த்து வந்த வாரிசு அரசியலும் தலைதூக்கியது.
பொதுவெளியில் வருவதையே தவிர்க்கும் ஈரான் உச்சத்தலைவர்… எப்படி செல்கின்றன தகவல்கள்!
இருப்பினும் உச்சத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக மொஜ்தபா பொதுவெளியில் தோன்றுவதையோ அல்லது நேரடி ஆடியோ, வீடியோ பதிவுகளை வெளியிடுவதையோ முற்றிலுமாகத் தவிர்த்து வருகிறார். அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறையின் டிஜிட்டல் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க, மொஜ்தபா மொபைல், இன்டர்நெட் போன்ற எந்தவொரு எலக்ட்ரானிக் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, மிகவும் நம்பகமான ரகசிய மனித கூரியர் வலைப்பின்னல் மூலமாகவே தனது செய்திகளையும் உத்தரவுகளையும் பரிமாறி வருகிறார்.
மொஜ்தபா கமேனி
ஈரானின் முன்னணி படைத்தளபதிகள் மற்றும் அரசின் உயரதிகாரிகளுக்குக் கூட உச்ச தலைவர் எங்கு தங்கியிருக்கிறார் என்ற விபரம் தெரியாது. அனைத்து அதிகாரப்பூர்வ செய்திகளும் பல அடுக்கு மத்தியஸ்தர்கள் மூலமாகவே கைமாற்றப்பட்டு அவருக்கு அனுப்பப்படுகின்றன.
அமெரிக்கா – ஈரான் இடையே திரைமறைவில் நடைபெற்று வரும் அமைதி மற்றும் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தத் தொடர்பு முறை பெரும் சவாலாக மாறியுள்ளது. அமெரிக்கா அனுப்பும் முக்கிய முன்மொழிவுகளுக்கு, இந்தச் சுற்றுவழி கூரியர் முறையினால் உச்ச தலைவரிடமிருந்து பதில் வர பல நாட்கள் ஆகின்றன. இதனால் சர்வதேச அளவில் முடிவுகள் எடுப்பதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ள ஈரானிய அதிகாரிகள்!
ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் நிலத்தடி பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மொஜ்தபா கமேனி தங்கியிருக்கும் பதுங்கு குழியில் எந்தவொரு ஜன்னலோ அல்லது வெளிச்சம் வரும் துவாரங்களோ கிடையாது. ஏனெனில், அமெரிக்காவின் அதிநவீன வெப்ப இமேஜிங் சாட்டிலைட்டுகள் சுவர்களுக்குள் இருக்கும் மனிதர்களின் உடல் வெப்பத்தை வைத்தே அங்கு யார் இருக்கிறார்கள் என்பதைக் துல்லியமாகக் கணித்துவிடும்.
இதனால், அவர் முற்றிலும் செயற்கை வெளிச்சம் கொண்ட, வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட ஒரு மூடிய அறைக்குள் வாழ்கிறார். உளவுத்துறை வட்டாரங்களின்படி, மொஜ்தபா கமேனி தனது அதிகாரிகளுக்கு உத்தரவுகளை எழுதி அனுப்ப சாதாரண தாள்களையோ பேனாக்களையோ பயன்படுத்துவதில்லை, அவர் பயன்படுத்தும் தாள்களில் ஒரு குறிப்பிட்ட ரசாயன மை பயன்படுத்தப்படுகிறது. அந்தத் தாள் உரிய அதிகாரியின் கையை அடைந்ததும், அதை ஒரு குறிப்பிட்ட வெப்பத்திலோ அல்லது ஒளியிலோ காட்டினால் மட்டுமே எழுத்துக்கள் தெரியும். படித்து முடித்த சில நிமிடங்களில் அந்த மை தானாகவே காற்றில் கரைந்து, தாள் வெறும் வெற்று காகிதமாக மாறிவிடும்.
மொஜ்தபா கமேனி
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய டிரோன்களை திசைதிருப்புவதற்காக, மொஜ்தபா கமேனியின் தோற்றத்தை ஒத்த 2 அல்லது 3 “பாடி டபுள்” ஈரானின் வெவ்வேறு பகுதிகளுக்கு ராணுவ வாகனங்களில் அனுப்பப்படுவதாக உளவுத்துறை சந்தேகிக்கிறது. இதன் மூலம் நிஜமான மொஜ்தபா எங்கு இருக்கிறார் என்பதை யாராலும் கணிக்க முடியாமல் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். டிஜிட்டல் சாதனங்கள் இல்லாததால், நிலத்தடி பதுங்கு குழிகளில் இருக்கும் ஈரானிய அமைச்சர்களும் ராணுவ தளபதிகளும் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள விசித்திரமான முறைகளைக் கையாள்கிறார்கள்.
ஈரானின் Bin Laden Playbook!
முக்கிய கோப்புகள் மற்றும் வரைபடங்கள் பழைய காலத்து மைக்ரோஃபிலிம்களாக (Microfilms) மாற்றப்பட்டு, உணவுப் பொட்டலங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்குள் மறைத்து வைத்து அதிகாரிகளுக்குள் கைமாற்றப்படுகின்றன. ரகசியக் குறியீடு அவர்கள் பேசும் மொழியிலேயே அமெரிக்க உளவுத்துறையால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சில பழங்கால பாரசீக வட்டார மொழிப் பழமொழிகளை குறியீட்டு வார்த்தைகளாகப் பயன்படுத்துகின்றனர்.

ஈரானின் இந்த ரகசிய தொடர்பு முறை, கடந்த காலங்களில் ஒசாமா பின் லேடன் அமெரிக்கத் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கப் பயன்படுத்திய ரகசியத் தொடர்பு முறையை ஒத்திருப்பதாக பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இதனை Bin Laden Playbook என்றும் அழைக்கின்றனர். பாதுகாப்புத் துறை மற்றும் உளவுத்துறை வட்டாரங்களில் Bin Laden Playbook என்பது, டிஜிட்டல் கண்காணிப்பு நெட்வொர்க்குகளான Satellites, Cyber Surveillance-யை ஏமாற்றி, முற்றிலும் தலைமறைவாக இருந்து கொண்டு, ஒருவர் தனது அமைப்பை வழிநடத்தும் ஒரு பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு உத்தியைக் குறிக்கிறது.
பின்லேடனின் பாதுகாப்பு அம்சங்களை ஒத்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈரான் தலைவர்?
1998-ல் அமெரிக்கா தனது Satellite Phone சிக்னலை பின்தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இருந்தே, ஒசாமா பின்லேடன் டிஜிட்டல் உலகிலிருந்து முற்றிலும் விலகத் தொடங்கினார். குறிப்பாக, 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, கொல்லப்படும் வரை சுமார் 10 ஆண்டுகள் பாகிஸ்தானின் அபோதாபாத் (Abbottabad) நகரில், அமெரிக்க உளவு அமைப்பான CIA-வின் கண்ணில் மண்ணைத் தூவி வாழ இந்த ‘Playbook’ உத்திகள்தான் உதவின. உலகமே பின்லேடனை ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான தோரா போரா (Tora Bora) மலைக் குகைகளில் தேடிக்கொண்டிருந்தபோது, அவர் பாகிஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான அபோதாபாத்தில், சொகுசு மாளிகையில் வசித்து வந்தார்.

இதில் உள்ள மிகப்பெரிய முரண் என்னவென்றால், பின்லேடன் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெறும் 1 கிலோமீட்டர் தொலைவில்தான் பாகிஸ்தானின் முதன்மை ராணுவ பயிற்று மையமான Kakul Military Academy அமைந்திருந்தது. பின்லேடன் தங்கியிருந்த அபோதாபாத் மாளிகை பல மில்லியன் மதிப்புடையதாக இருந்தாலும், அங்கு வேண்டுமென்றே சில வசதிகள் தவிர்க்கப்பட்டன. அதாவது Zero Digital Footprint. அந்த வீட்டில் எந்தவொரு இணைய இணைப்போ, தொலைபேசி இணைப்போ கிடையாது. மொபைல் போன்கள் மற்றும் சிக்னல் அனுப்பக்கூடிய எந்தவொரு எலக்ட்ரானிக் சாதனங்களும் வீட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை. வீட்டிலிருந்து வெளியாகும் குப்பைகளை வெளியே கொட்டினால், அதன் மூலம் உளவுத்துறையினர் DNA அல்லது இதர ஆதாரங்களைச் சேகரித்துவிடுவார்கள் என்பதால், மாளிகைக்குள்ளேயே அனைத்துக் குப்பைகளும் எரித்து சாம்பலாக்கப்பட்டன.
டிஜிட்டல் உலகம் இல்லாமல் உலகெங்கும் உள்ள தனது அல்-கொய்தா நெட்வொர்க்குடன் பின்லேடன் தொடர்பு கொள்ள ஒரு தனித்துவமான சுற்றுவழியைப் பயன்படுத்தினார். பின்லேடன், இணைய வசதி இல்லாத தனது கணினியில் அனுப்ப வேண்டிய செய்திகளை டைப் செய்வார். டைப் செய்த கோப்புகளை ஒரு சிறிய பென்டிரைவ் அல்லது மெமரி கார்டில் சேமித்து, தனது நம்பிக்கைக்குரிய மனித கூரியரிடம் ரகசியமாக ஒப்படைப்பார். அந்தக் கூரியர் மாளிகையை விட்டுப் பல மைல்கள் தொலைவில் உள்ள ஏதேனும் ஒரு பொதுவான இன்டர்நெட் கஃபேவுக்கு பயணிப்பார். அங்குள்ள கணினியில் பென்டிரைவை மாட்டி, பின்லேடனின் செய்தியை இமெயிலாக அனுப்பிவிட்டு, அவருக்கும் வந்திருக்கும் இமெயில்களை அதே பென்டிரைவில் டவுன்லோடு செய்து கொள்வார்.

மாளிகைக்குத் திரும்பும் கூரியரிடமிருந்து பென்டிரைவை வாங்கி, பின்லேடன் தனது கணினியில் ஏற்றி பதில்களை ஆஃப்லைனிலேயே வாசிப்பார். ஒற்றை நபர் பிடிபட்டால் ஒட்டுமொத்த அமைப்பும் அழியும் என்பதால், பின்லேடன் தனது Playbook-கில் சில கடுமையான விதிகளை வைத்திருந்தார். பின்லேடனின் நேரடி கூரியர், இறுதி நபரை நேரடியாகச் சந்திக்க மாட்டார். சுரங்கப்பாதைகள் அல்லது மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைகளின் கூரையிடப்பட்ட பகுதிகளில் வாரம் இருமுறை மட்டுமே மற்றொரு இடைத்தரகரைச் சந்தித்து பென்டிரைவ்களை மாற்றுவார். அமெரிக்காவின் அதிநவீன உளவு விமானங்கள் மற்றும் சாட்டிலைட் கேமராக்களின் பார்வையில் இருந்து தப்பிக்க, மேகமூட்டமான நாட்களில் மட்டுமே பெரும்பாலும் இந்த மனித பரிமாற்றங்கள் நடந்தன.
“கீழ்மட்ட அதிகாரிகளின் இருப்பிடம் தலைவருக்குத் தெரியலாம்; ஆனால் தலைவரின் இருப்பிடம் கூரியரைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது” என்பது இதில் மிக முக்கியமான விதி. இந்த முறை தகவல்தொடர்பை மிகத் தாமதமாக்கியது. இருப்பினும், இது பின்லேடனை 10 ஆண்டுகள் பாதுகாத்தது. ஆனால், இறுதியில் இதே பிளேபுக்கின் ஒரே ஒரு பலவீனமான “அபு அகமது அல்-குவைத்தி” (Abu Ahmed al-Kuwaiti) என்ற மனித கூரியரை CIA பின்தொடர்ந்ததன் மூலமே அபோதாபாத் மாளிகை கண்டுபிடிக்கப்பட்டு, பின்லேடன் கொல்லப்பட்டார்.

தற்போது ஈரானில் அமெரிக்கா நடத்திய ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ தாக்குதலுக்குப் பின், புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியும், அமெரிக்காவின் அதிநவீன சைபர் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க இதே “டிஜிட்டல் தவிர்ப்பு மற்றும் மனித கூரியர்” உத்தியைப் பயன்படுத்துவதால், தற்போதைய சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் இதனை “பினலேடன் பிளேபுக்” என்று ஒப்பிட்டுக் குறிப்பிடுகிறார்கள்.
“காமெடி சீன் போல…!”
அமெரிக்கா ஈரான் இடையே தற்போது திரைமறைவில் நடக்கும் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில், அமெரிக்கா அனுப்பும் முக்கியத் தகவல்களுக்கு மொஜ்தபாவிடமிருந்து பதில் வர பல நாட்கள் ஆகின்றன. ஏனெனில், அவரது ரகசிய மனித கூரியர் நெட்வொர்க் வழியாகத் தகவல் சென்று, அவர் படித்து, மீண்டும் பதில் வர நீண்ட தூரம் கடக்க வேண்டியுள்ளது. அமெரிக்க உளவுத்துறைக்கு பயந்து ஈரானின் பெரும்பாலான உயர் அதிகாரிகள் நிலத்தடி பதுங்கு குழிகளில் தங்கியுள்ளனர். “அவர்கள் தங்களுக்குள் எப்படிப் பேசிக்கொள்வது என்று தெரியாமல் தவிப்பதைப் பார்ப்பது ஒரு காமெடி நாடகம் (Sitcom) பார்ப்பது போல் உள்ளது” என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் சமீபத்தில் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக உலகிலேயே அதிநவீன சைபர் ராணுவத்தையும், ஏவுகணைகளையும் தயாரித்து வந்த ஈரான், இன்று அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பயந்து, 19-ஆம் நூற்றாண்டு காலத்து மனிதக் கூரியர் மற்றும் காகிதக் கடித முறைக்குத் தள்ளப்பட்டிருப்பதுதான் சர்வதேச அரசியல் அரங்கில் பேசப்படும் மிகப்பெரிய சுவாரஸ்ய முரணாகும்.

