செஜில்-2 எனும் ஏவுகணை திரவ எரிபொருளுக்குப் பதிலாக திட எரிபொருளைப் பயன்படுத்துகிறது. இதனால் இதை சில நிமிடங்களில் ஏவத் தயார் செய்துவிட முடியும். இது எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை கொடுக்க நேரமில்லாமல் தாக்குதல் நடத்த உதவுகிறது. ஈரானில் இருந்து ஏவினால் இது இஸ்ரேல், எகிப்து மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவின் பல பகுதிகளைத் துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்டது.
இந்த ஏவுகணை வளிமண்டலத்திற்குள் நுழையும்போது, எதிரி நாட்டு ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை (Anti-missile systems) ஏமாற்றுவதற்காகத் தனது பாதையை மாற்றிக்கொண்டே செல்லும் திறனைப் பெற்றுள்ளது. இதன் வேகமும், கணிக்க முடியாத திசை மாற்றமும் வானில் ஒரு ‘நடனம்’ போலத் தெரிவதால், இது “டான்சிங் மிசைல்” என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஏவுகணையைச் சுட்டு வீழ்த்துவது இஸ்ரேலின் ‘ஆரோ’ (Arrow) அல்லது அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ (Patriot) போன்ற பாதுகாப்பு அமைப்புகளுக்கு மிகப்பெரிய சவாலாகும். செஜில் ஏவுகணையில் உள்ள மற்றொரு ஆபத்து அதன் கிளஸ்டர் குண்டுகள். ஒரு ஏவுகணை வானில் வரும்போதே பல நூறு சிறிய குண்டுகளாகப் பிரிந்து சிதறும். இதனால் ஒரே நேரத்தில் ஒரு பெரிய பரப்பளவு உதாரணமாக ஒரு முழு தெரு அல்லது ராணுவத் தளம் தீக்கிரையாகிறது.
பெய்ட் ஷெமேஷ் (Beit Shemesh) என்ற பகுதியில் விழுந்த செஜில் ஏவுகணையின் பகுதி குடியிருப்பு அறையின் பாதுகாப்பு அறை மீது விழுந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது . இதில் 9 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடையந்தனர்.துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஈரான் நடத்திய, டிரோன் தாக்குதலில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
துபாயில் அமைந்துள்ள உலகின் மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையத்தின் அருகே நடந்த இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று துபாய் அதிகாரிகள் கூறியுள்ளனர். தீயை அணைக்க துபாய் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. துபாய் விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால், ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. துபாய் விமான நிலையத்திற்கு அருகில் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் அறிவித்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மூன்று முக்கிய துறைமுகங்களை காலி செய்ய ஈரான் அழைப்பு விடுத்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை கையாளும் முக்கிய முனையமான கார்க் தீவில் சமீபத்தில் தாக்குதல்களை நடத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துறைமுகங்கள், கப்பல் தளங்கள் மற்றும் மறைவிடங்களைப் பயன்படுத்துவதாக ஈரான் குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு பதிலடியாக ஈரான் துபாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த வாரம் ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினால் அல்லது அமெரிக்கச் சொத்துக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தினால், ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா நேரடியாகத் தாக்குதல் நடத்தும் என டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக மிரட்டுவது குறித்து, கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், “அமெரிக்காவின் கடற்படை வலிமைக்கு முன்னால் ஈரானின் இந்த மிரட்டல்கள் எடுபடாது” எனத் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் ராணுவக் கப்பல்களின் பாதுகாப்புடன் டாங்கர்களை இயக்கப் போவதாக அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த ஒற்றை எச்சரிக்கையால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 5 முதல் 10 டாலர்கள் வரை உடனடியாக அதிகரித்தது. மத்திய கிழக்கில் போர் மூளும் என்ற அச்சத்தில் உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் எதிரிகளுக்கு மட்டுமே, நண்பர்களுக்கு இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டால், அது வெறும் எரிசக்தி நெருக்கடியாக மட்டும் இருக்காது. உலகளாவிய “உணவுப் போர்” ஆகவும் மாறிவிடும். வளைகுடா நாடுகள் தங்கள் உணவுத் தேவையில் 90% இறக்குமதியையே நம்பியிருப்பதால், அங்கு இதன் தாக்கம் மிகக் கொடூரமாக இருக்கும்.
வளைகுடா நாடுகளான சவுதி, யுஏஇ, கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் ஆகியவை உணவுப் பாதுகாப்பிற்கு ஹார்முஸ் ஜலசந்தியைத்தான் உயிர்நாடியாகக் கொண்டுள்ளன. இப்பகுதிக்கு வரும் உணவில் சுமார் 70% முதல் 90% வரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. இது முடக்கப்பட்டால் அரிசி, கோதுமை, சோளம் மற்றும் சமையல் எண்ணெய் விநியோகம் உடனடியாகத் தடைபடும். இதில் குவைத் மட்டும் 95% உணவுப் பொருட்களை இறக்குமதி தான் செய்கிறது… மற்ற நாடுகள் 90 சதவிகிதம் வரை உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கின்றன. இந்த இறக்குமதி அனைத்தும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் நடைபெறுகிறது.
ஏற்கெனவே ஈரான் நடத்திய தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் மக்கள் உணவுகளைச் சேமிக்கத் தொடங்கிவிட்டனர். குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் கடல் வழியாக உணவு பெற ஹார்முஸை மட்டுமே நம்பியுள்ளன. இவை முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது. ஓமன் மற்றும் சவுதி அரேபியா மட்டும் செங்கடல் அல்லது அரபிக்கடல் மூலம் தப்பிக்க வாய்ப்புள்ளது.
உலக உணவை உற்பத்தி செய்யத் தேவையான உரங்கள் (Fertilizers) தயாரிப்பதில் வளைகுடா நாடுகள் முன்னணியில் உள்ளன. உலகில் வர்த்தகம் செய்யப்படும் ‘யுரியா’ (Urea) உரத்தில் 30% முதல் 45% வரை ஹார்முஸ் வழியாகவே செல்கிறது. இது முடங்கினால் இந்தியா மற்றும் பிரேசில் போன்ற விவசாய நாடுகளின் பயிர் விளைச்சல் 30% வரை குறையும். உரங்கள் கிடைக்கவில்லை என்றால் கோதுமை, சோளம் மற்றும் அரிசி அறுவடை உலக அளவில் பாதிக்கப்படும். இது 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உலகளாவிய உணவுப் பஞ்சத்திற்கு வழிவகுக்கும்.
கப்பல்கள், Cape of Good Hope வழியாக நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால் உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயரும். கூடவே டீசல் விலையும் உயர்வதால் விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு வரும் செலவும் அதிகரித்து, சாமானிய மக்களின் மளிகைப் பட்டியல் விலை பல மடங்கு உயரும். கடல் வழி அடைக்கப்பட்டால், துபாய் துறைமுகங்களுக்குப் பதிலாகச் சவுதி அரேபியாவின் தரைவழிச் சாலைகளை மற்ற வளைகுடா நாடுகள் நம்ப வேண்டியிருக்கும்.
யுஏஇ போன்ற நாடுகள் 4 முதல் 6 மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுகளைச் சேமித்து வைத்துள்ளன. ஆனால், முடக்கம் நீண்ட காலம் நீடித்தால் இதுவும் போதாது. ஹார்முஸ் ஜலசந்தி நீண்ட காலத்திற்கு மூடப்பட்டால், வளைகுடா நாடுகளில் உடனடி உணவுத் தட்டுப்பாடும், இந்தியா போன்ற நாடுகளில் உரத் தட்டுப்பாட்டால் நீண்ட கால உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும். இந்தியாவை பொறுத்தவரை, அதன் உணவுப் பாதுகாப்பு நேரடியாக இந்த உர இறக்குமதியைச் சார்ந்து இருக்கிறது. இந்தியா தனது மொத்த உரத் தேவையில் சுமார் 30% – 40% இறக்குமதியையே நம்பியுள்ளது. முக்கிய உரமான யுரியா உற்பத்திக்கான இயற்கை எரிவாயுவில் பெரும் பகுதி வளைகுடா நாடுகளிலிருந்து வருகிறது.
அரிசி, கோதுமை மற்றும் கரும்பு ஆகியவற்றிற்கு அதிக நைட்ரஜன் உரங்கள் தேவை. இந்தியாவில் உரத் தொழிற்சாலைகள் இயங்கத் தேவையான திரவ இயற்கை எரிவாயுவில் (LNG) கணிசமான அளவு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. எரிவாயு தடைபட்டால் உள்நாட்டு உர உற்பத்தியும் நின்றுவிடும். ஓமன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலிருந்து நேரடியாக வரும் யுரியா மற்றும் அம்மோனியா கப்பல்கள் ஹார்முஸ் முடக்கத்தால் இந்தியா வர முடியாது.
சர்வதேசச் சந்தையில் உரங்களின் விலை 200% முதல் 300% வரை உயர வாய்ப்புள்ளது. இது விவசாயிகளின் உற்பத்திச் செலவை பன்மடங்கு அதிகரிக்கும். உரத்தட்டுப்பாடு ஏற்பட்டால், இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி அடுத்த பருவத்தில் 20% முதல் 25% வரை குறையக்கூடும். விளைச்சல் குறையும்போது சந்தையில் காய்கறிகள், அரிசி மற்றும் கோதுமையின் விலை சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உயரும்.
அரசு உரங்களுக்காக வழங்கும் மானியம் பல்லாயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று பயோ-ஃபெர்டிலைசர் (Bio Fertilizer). ரசாயன உரங்களுக்குப் பதிலாக இயற்கை மற்றும் உயிரி உரங்களைப் பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது.
மேலும் ரஷ்யா மற்றும் மொராக்கோ போன்ற நாடுகளுடன் மாற்றுப் பாதைகள் வழியாக உரங்களைப் பெற ஒப்பந்தம் செய்து வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி என்பது உலகப் பொருளாதார இயந்திரம் ஓடுவதற்கான ‘எரிபொருள் குழாய்’. இந்தக் குழாய் அடைக்கப்பட்டால், அதன் பாதிப்பு வளைகுடா நாடுகளை விட, அதை நம்பியிருக்கும் இந்தியா போன்ற நுகர்வு நாடுகளுக்கே அதிகமாக இருக்கும்.
