டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், அமெரிக்க பெண்ணிடம் ஒரே போன் காலில் மூன்று கோடி ரூபாயைச் சுருட்டிய சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, அமெரிக்காவைச் சேர்ந்த லிசா ரோத் என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஜூலை 4-ம் தேதி மைக்ரோசாஃப்ட் ஏஜென்ட் என்று ஒருவரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பை ஏற்ற அமெரிக்க பெண்ணிடம், `தங்களது வங்கிக் கணக்கு பாதுகாப்பானதாக இல்லை. உடனடியாக க்ரிப்டோகரன்சி வாலட்டுக்கு (cryptocurrency wallet) மாற்றுங்கள்” என்று அந்த நபர் கூறியிருக்கிறார்.

அதோடு, அந்தப் பெண்ணின் கணினியில் அங்கீகரிக்கப்படாத அக்செஸைப் பெற்று, அவரின் பெயரில் ஒரு கிரிப்டோகரன்சி கணக்கை உருவாக்கி அவரின் பெயரில் இருந்த 4,00,000 டாலரை (ரூ.3.3 கோடி) அதற்கு மாற்றுமாறு அந்த நபர் கட்டாயப்படுத்தினார். இதுவொரு மோசடி என்று அறியாத அந்தப் பெண், பின்னர் அந்தக் கணக்கை செக் செய்தபோது தன்னுடைய பணம் மொத்தமும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், சிபிஐ இதில் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது. அதோடு, அமலாக்கத்துறையும் ஒருபக்கம் இதில் விசாரணை மேற்கொள்ள அடுத்தடுத்து முடிச்சுகள் அவிழ்ந்தன.

