Last Updated:
‘CRIB’: வழக்கத்திற்கு மாறாக அவரது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் வினைபுரியும் நிலையில் இருந்தது பெங்களூரு டி.டி.கே. ரத்த மையத்தில் உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணுக்கு புதிய வகை ரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவத் துறையில் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு அங்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், அவரது ரத்தம் ‘ORH பாசிட்டிவ்’ வகையைச் சேர்ந்தது என்று தெரியவந்தது.
ஆனால், வழக்கத்திற்கு மாறாக அவரது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் வினைபுரியும் நிலையில் இருந்தது பெங்களூரு டி.டி.கே. ரத்த மையத்தில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணின் ரத்த மாதிரி, இங்கிலாந்தில் உள்ள சர்வதேச ரத்த வகை கண்டறியும் மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அங்கு பத்து மாதங்கள் நடைபெற்ற விரிவான ஆராய்ச்சிக்குப் பின்னர், ரத்தத்தில் புதிய வகை ஆன்டிஜென் குரோமர் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இது உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரத்த வகைக்கு “CRIB” என அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டு உள்ளது. இதில் CR என்பது குரோமரையும் மற்றும் IB இந்தியா மற்றும் பெங்களூருவையும் குறிக்கிறது.
August 01, 2025 8:40 AM IST