நல்ல உடை அணிவது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். தங்களை அழகாகக் காட்டிக் கொள்ள பல கடைகள் ஏறி இறங்கி உடைகளைப் பலரும் தேர்வு செய்வதுண்டு. நமது பட்ஜெட்டுக்கு ஏற்றபடி ஆயிரம் ரூபாய் முதல் கோடிகள் வரை துணியும் கிடைக்கும். ஆனால், உலகின் மிக விலையுயர்ந்த ஆடையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?!

`விக்குனா துணி’ (Vicuña) உலகின் மிக விலையுயர்ந்த துணியாக கருதப்படுகிறது. தென் அமெரிக்க ஆண்டிஸ் மலையில் (Andes Mountains) வாழும் ஒட்டகமான விக்குனா என்ற விலங்கின் தோலில் இருந்து ஆடையைத் தயாரிக்கின்றனர். இதனால் விக்குனா துணி என்ற பெயர் வந்தது.
மலையின் குளிர்ச்சியான காலநிலையில் இருந்து தற்காத்துக் கொள்ள இதன் அடர்த்தியான ரோமங்கள் உதவுகிறது. அதன் ரோமத்தில் இருந்து தயாரிக்கப்படும் உடைகள் மென்மையானதாக இருக்கும்.
பெரும்பாலும் இந்த உடைகள் செல்வந்தர்களாலும், அரச குடும்பத்தினராலும் அணியப்பட்டது. இவர்கள் அல்லாமல் வேறு யாரேனும் விக்குனாவால் செய்யப்பட்ட ஆடை அணிந்து பிடிபட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்கான் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் இந்த விலங்கினங்கள் அதன் ரோமங்களுக்காக அதிகம் வேட்டையாடப்பட்டது. இதுவே உயிரினத்தின் அழிவு நிலைக்கும் இட்டுச் சென்றது.
தற்போது உலகம் முழுவதும் 3,50,000 விக்குனாக்கள் மட்டுமே வாழ்வதாக கூறப்படுகிறது. இன்றளவும் சிறப்புச் சடங்குகள் மற்றும் கருவுறுதல் சடங்குகளில் இந்த ஆடைகள் பயன்படுத்தப்படுகிறது. விக்குனா விலங்கு பெருவின் அதிகாரப்பூர்வமற்ற தேசிய விலங்காகக் கருதப்படுகிறது.

பெருவியன் சட்டங்களால் தற்போது இவை பாதுகாக்கப்படுகின்றன. இருந்தாலும் சில நிறுவனங்கள் அதன் ரோமங்களிலிருந்து ஸ்வெட்டர்கள், சூட்கள், கோட்டுகள் மற்றும் பிற ஆடைகளை உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக ஒரு கோட் செய்வதற்கு 35 விக்குனாக்களின் தோலை நீக்க வேண்டியிருக்கும். லோரோ பியானா (Loro Piana) நிறுவனம் விக்குனாவால் செய்யப்பட்ட ஒரு செட் காலுறைகளை 80,000 ரூபாய்க்கும், ஒரு சட்டையை 4.23 லட்ச ரூபாய்க்கும் விற்கிறது.

