Last Updated:
நெல்லையில் பட்டாக்களில் இறந்த நில உடைமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் பெயர்களை சேர்க்க இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் உள்ள நிலங்களின் நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது, https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இருப்பினும், பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுள் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கபடாமல் இருந்தன. அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமல் உள்ளன.
எனவே, பட்டாக்களில் உள்ள இறந்த நில உடைமைதாரர்களின் பெயர்களை நீக்கலாம். அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்கலாம். பட்டாக்களை நிகழ்நிலைப்படுத்த பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்டாவிலுள்ள இறந்த பட்டாதாரரின் வாரிசுதாரர்கள் விண்ணப்பிக்கும் நேர்வில், இறப்பு சான்று, வாரிசு சான்று, மேற்கண்ட வாரிசுகளில் எவரேனும் இறந்திருப்பின் அவரது இறப்புசான்று வேண்டும். மேலும், வாரிசு சான்று, பட்டா மாறுதல் கோரும் புலம் தொடர்பான வில்லங்க சான்றிதழ், பதிவு செய்யப்பட்ட பாகப்பிரிவினை, தான செட்டில்மெண்ட், உயில் சாசன ஆவண நகல் வேண்டும்.
அதேபோல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பட்டா மாறுதல் கோரப்படின் உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பு நகல் வேண்டும். கிரையம் பெற்றவர் விண்ணப்பிக்கும் நேர்வில், இறப்பு சான்று, வாரிசு சான்று, மேற்கண்ட வாரிசுகளில் எவரேனும் இறந்திருப்பின் அவரது இறப்புசான்று வேண்டும். மேலும் வாரிசு சான்று, பட்டா மாறுதல் கோரும் புலம் தொடர்பான வில்லங்க சான்றிதழ், பதிவு செய்யப்பட்ட கிரைய ஆவண நகல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நெல்லை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
July 20, 2025 9:28 PM IST


