சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. முதல் போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் தோல்வி அடைந்த நிலையில், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் லாகூரில் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 37 ரன்களில் 3 விக்கெட்களை இழந்தபோதிலும், இப்ராஹிம் ஜத்ரான் சதம் விளாசி அணியை சரிவில் இருந்து மீட்டார். 177 ரன்கள் குவித்த அவர், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியில் அதிக ரன்கள் சேர்த்திருந்த இங்கிலாந்தின் பென் டக்கெட்டின் சாதனையை முறியடித்தார்.
50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தாலும், ஜோ ரூட் சதம் அடித்து நம்பிக்கை கொடுத்தார். எனினும் கடைசி நேரத்தில் மீண்டும் இங்கிலாந்து அணி மளமளவென விக்கெட்களை இழந்து 317 ரன்களில் ஆல்அவுட்டானது. அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ஆப்கானிஸ்தான் அணி கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.
3 ஹீரோக்கள்..
இப்ராஹிம் ஜத்ரான்: ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு முதன்மையான காரணி இப்ராஹிம் ஜத்ரான். அந்த அணியின் ஒட்டுமொத்த ரன்களில் 60%-க்கும் அதிகமாக எடுத்தார். ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 37/3 ஆக இருந்தது. 37 ரன்களில் 3 விக்கெட்களை இழந்தபோதிலும், அணியை பொறுமையாக மீட்டெடுத்தார். கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிடி உடன் 103 ரன்கள் பார்ட்னர்ஷிப், அஸ்மதுல்லா உமர்சாய் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப், நபியுடன் மற்றொரு 100+ பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மெல்ல மெல்ல முன்னேற்றினார். தனிப்பட்ட வகையில், 146 பந்துகளில் 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களை விளாசி 177 ரன்கள் எடுத்தார். சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் எடுக்கும் முதல் சதம் இதுவாகும். மேலும், சாம்பியன்ஸ் டிராபியில் தனிநபர் அதிகபட்சமும் இதுவே.
அஸ்மத்துல்லா உமர்சாய்: ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான அஸ்மத்துல்லா உமர்சாய், நேற்றைய ஆட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். இக்கட்டான தருணத்தில் 6வது வீரராக களமிறங்கி 31 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 41 ரன்கள் என்கிற பங்களிப்பை கொடுத்தார். பௌலிங்கில் அதற்கும் மேல் ஒருபடி சென்று 5 விக்கெட் எடுத்த இங்கிலாந்து அணி வீழ முக்கிய துருப்பாக அமைந்தார். ஐசிசி ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் ஆப்கன் பௌலர் இவரே. உமர்சாய் வீழ்த்திய 5 விக்கெட்களில், பிலிப் சால்ட், ஜோ ரூட், ஜாஸ் பட்லர் என 3 முக்கிய தலைகள் அடக்கம். இவரின் அபார பந்துவீச்சால் இப்போது இங்கிலாந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரைவிட்டே வெளியேறியுள்ளது.
ஜோ ரூட்: இங்கிலாந்து அணியில் ஒற்றை நபர் வெற்றிக்கு போராடினார் என்றால் அது ஜோ ரூட் மட்டுமே. ஜோ ரூட் களத்தில் இருக்கும் வரை இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெறவும் வாய்ப்பு இருந்தது. ரூட், 111 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றாலும், அவருக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கவில்லை என்பதால், அணி தோல்விக்கு தள்ளப்பட்டது. 30/2 என்ற நிலையில் இருந்தபோது ரூட் பேட்டிங் செய்ய வந்தார். அதன்பின் சிறப்பாக ஆடினாலும், அவருக்கான சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை.
3 ஜீரோக்கள்..
பிலிப் சால்ட்: இங்கிலாந்து மீண்டும் ஒரு மோசமான தொடக்கம் பிலிப் சால்ட் மூலமாக நேற்று அமைந்தது. மோசமான ஷாட் தேர்வு காரணமாக 13 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து 4வது ஓவரிலேயே நடையைக் கட்டினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள், இந்தியாவுக்கு எதிரான தொடரில் மூன்று போட்டிகளில் 23, 26 மற்றும் 43 ரன்கள் என அவரின் மோசமான ஃபார்ம் இங்கிலாந்து அணியை கடுமையாக பாதித்து வருகிறது என்பது நிதர்சனம்.
ஹாரி புரூக்: நேற்றைய போட்டியில் 21 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தாலும், முக்கியமான கட்டத்தில் அணிக்கு கைகொடுக்க தவறினார் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனான ஹாரி புரூக். 22வது ஓவரில் ஒரு பக்கம் ரூட் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றும், தவறான ஷாட் ஆடி அந்த முயற்சிக்கு உதவியாக இல்லாமல் பெவிலியன் திரும்பினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 3 ரன்கள், இந்திய தொடரில் 19, 31 மற்றும் 0 என தொடர்ச்சியாக ஹாரி புரூக் சொதப்பி வருகிறார்.
லியாம் லிவிங்ஸ்டோன்: லியாம் லிவிங்ஸ்டோனின் ஃபினிஷர் பங்கு இப்போது கேள்விக்குறியாகி வருகிறது. அவரின் வெற்றிகளை விட இப்போது தோல்விகள் அதிமாகி வருகின்றன. மீண்டும் தவறான ஷாட் தேர்வு என்று எட்ஜ் ஆகி அவுட்டானார். டெத் ஓவர்களில் லிவிங்ஸ்டோனின் இருப்பு இங்கிலாந்து அணிக்கு அவசியமான ஒன்று. ஆனால் பொறுமையின்மையால் போராட்டமே இல்லாமல் ஆப்கன் பந்துவீச்சில் சரண்டர் ஆனார். அதுவும், 39வது ஓவரில். கடைசி ஆறு போட்டிகளில் 6, 5, 41, 9, 14 மற்றும் 10 ரன்கள் என்பது லிவிங்ஸ்டோன் எடுத்தது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 27, 2025 7:22 AM IST

