சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை 3-ஆவது முறையாக வென்ற அணி என்ற புதிய வரலாற்றை இந்தியா படைத்துள்ளது. மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1998-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் கோப்பையை தென் ஆப்பிரிக்கா வென்ற நிலையில், 2000-ஆம் ஆண்டு நடந்த 2-ஆவது தொடரில் நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா கோப்பையை இழந்தது.
இதன் பின்னர், 2002-ஆம் ஆண்டு நடந்த மூன்றாவது தொடரில், இறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டதால், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன. இதையடுத்து, 11 ஆண்டுகளுக்குப் பின்னர் 2013-ஆம் ஆண்டு இங்கிலாந்தை வீழ்த்தி 2-ஆவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றது.
தற்போது, 12 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, 3-ஆவது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை தட்டிச் சென்றது. இதன் மூலம், மூன்று முறை சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்து துபாய் மைதானமே வாணவேடிக்கைகளால் ஜொலித்தது. வெற்றிக் கோப்பையை கையில் ஏந்தி இந்திய வீரர்கள் மைதானத்தில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விராட் கோலியும் – ரோகித் சர்மாவும் இணைந்து ஸ்டெம்புகளை வைத்து தாண்டியா ஆட்டம் ஆட, ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் இணைந்து கங்னம் ஸ்டைலில் நடனமாடி மகிழ்ந்தனர்.
இதற்கிடையே, சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர் உட்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ”3 முறை சாம்பியன்ஸ் டிராபி வென்ற ஒரே அணி, இந்தியா” என்ற பெருமையை படைத்த வீரர்களை மனதார வாழ்த்துவதாக தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | Rohit Sharma | ஜெயசூர்யாவின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா.. என்ன தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் அசாதாரணமான ஆட்டத்திற்கு கிடைத்த சிறப்பான வெற்றி என்று கூறியுள்ள பிரதமர் மோடி, சாம்பியன்ஸ் டிராபியை நாட்டிற்கு கொண்டு வரும் வீரர்களை நினைத்து பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதே போன்று, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான வெற்றியை இந்திய அணி பெற்றிருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் புகழ் மேலும் உயரட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்தியுள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 10, 2025 6:51 AM IST

