Last Updated:
சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் மோதல் மழையால் ரத்து. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி. அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா முன்னேறியது. தென்னாப்பிரிக்கா வாய்ப்பு அதிகம்.
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. சாம்பியன்ஸ் டிராஃபி அரையிறுதியில் நுழைவதற்கு ஆப்கானிஸ்தானுக்கு முக்கியமாக அமைந்த போட்டி ரத்து செய்யப்பட்டாலும் அந்த அணி முழுமையாக இன்னும் வெளியேறவில்லை.
சாமபியன்ஸ் டிராஃபி தொடரில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 10 ஆவது லீக் போட்டி லாகூர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைடுயடுத்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அட்டல் 85 ரன்களும், அஷமத்துல்லா 67 ரன்களும் குவித்தனர்.
இதையடுத்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி எந்நேரமும் மழை குறுக்கிடலாம் என்பதால் அதிரடியாகவே விளையாடி வந்தது. 12.5 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலியா விளையாடி வந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து கனமழை பெய்தால் போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராஃபி அரையிறுதிக்கு குரூப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறி இருந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் 3 புள்ளிகளுடன் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு மீதம் ஒரு போட்டி உள்ளது. இங்கிலாந்தை எதிர்கொள்ளும் அந்த அணி மிகப்பெரிய ரன்ரேட் அடிப்படையில் தோல்வியடைந்தால் மட்டுமே ஆப்கன் அரையிறுதிக்கு முன்னேறும். ஆனால் அந்த வாய்ப்பு மிகவும் அரிது என்பதால் தென்னாப்பிரிக்கா அணியே அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடதக்கது.
February 28, 2025 9:58 PM IST


