Last Updated:
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அமெரிக்கா வரிவிதிப்பால் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் ஜவுளித்துறையினர் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பால் திருப்பூரின் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஒன்றாம் தேதி தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஜவுளித் துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
திருப்பூரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆடைகள் ஏற்றுமதி மூலமாக, ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி ஈட்டப்படும் நிலையில், ஒட்டுமொத்தமாக 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆண்டுதோறும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பிகார், ஒடிசா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெற்று பயனடைகின்றனர்.
இந்த சூழலில், அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பால் ஆர்டர்கள் எடுக்க முடியாத நிலைக்கு பின்னலாடை நிறுவனங்கள் தள்ளப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழந்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், தற்போதைய நிலையில் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளை மத்திய அரசு அழைத்துப் பேச வேண்டும் என்றார்.
இந்நிலையில், வரும் 1-ஆம் தேதி தாக்கலாகவுள்ள மத்திய பட்ஜெட்டில் வங்கிக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதோடு பிற கடன்களை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிபர் டிரம்பின் 50 சதவிகித வரிவிதிப்பால் அமெரிக்க ஆர்டர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய தயாரிப்புகள் மீது 500 சதவிகிதம் வரை வரி விதிக்கும் மசோதாவுக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த சட்டம் அமலுக்கு வந்தால் தங்கள் நிலைமை சிக்கலுக்குள்ளாகும் என்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


