பிகார் மாநிலத்திற்கு நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி, பாஜக உள்ளிட்டவை தேசிய ஜனநாயக கூட்டணியிலும், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்டவை இந்தியா (மகாகத்பந்தன்) கூட்டணியிலும் தேர்தலை சந்திக்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணிக்கான முதலமைச்சர் வேட்பாளர் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று இந்தியா (மகாகத்பந்தன்) கூட்டணி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. அதில் முக்கியமான சில வாக்குறுதிகளை இங்கு பார்ப்போம்.
இந்தியா (மகாகத்பந்தன்) தேர்தல் வாக்குறுதிகள்: அனைத்து சிறுபான்மை சமூகங்களின் அரசியலமைப்பு உரிமைகளும் பாதுகாக்கப்படும். வக்ஃப் திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்படும், புத்தகயாவில் அமைந்துள்ள புத்த கோவில்களின் மேலாண்மை புத்த சமூக மக்களிடம் ஒப்படைக்கப்படும்.
அனைத்து தானியங்களும் விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் வாங்கப்படும். பிகார் மக்கள் அனைவருக்கும் ஜன் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
மக்கள்தொகைக்கு ஏற்ப 50% இடஒதுக்கீடு வரம்பை அதிகரிக்க, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம் அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
உள்ளாட்சிகளில் தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு இருக்கும் 20% இட ஒதுக்கீடு, 30% ஆக அதிகரிக்கப்படும். பட்டியலின பிரிவினரின் இட ஒதுக்கீடு 16%ல் இருந்து 20%ஆக அதிகரிக்கப்படும். பழங்குடியினருக்கான (ST) இடஒதுக்கீட்டில் விகிதாசார அதிகரிப்பு உறுதி செய்யப்படும்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த 20 நாட்களுக்குள் இதற்கான சட்டம் இயற்றப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மை-பெஹின் மான் யோஜனா திட்டத்தின் கீழ் டிசம்பர் 1ஆம் தேதி முதல் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 வழங்கப்படும். அதாவது ஆண்டுக்கு ரூ. 30,000 ஆயிரம் என அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் ஆகியவை வாக்குறுதிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
October 28, 2025 6:35 PM IST
Bihar Election | 20 நாளுக்குள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! பெண்களுக்கு ரூ. 30,000.. – இந்தியா கூட்டணி வாக்குறுதிகள்

