Last Updated:
“பிகாரை குற்றம் மற்றும் ஊழல் இல்லாத மாநிலமாக உருவாக்குவோம்” என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
குற்றம் மற்றும் ஊழல் இல்லாத பிகாரை உருவாக்க உள்ளதாக மகாகத்பந்தன் கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகாரில் அடுத்த மாதம் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ், பிகார் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கப்போவதில்லை என்றும் எது நடக்குமோ எதை செயல்படுத்த முடியுமோ அதையே மக்களுக்கு வாக்குறுதிகளாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் டாப் ஐந்து மாநிலங்கள் பாஜகவின் ஆட்சியின் கீழ் அதிக குற்றங்கள் நிறைந்த மாநிலங்களாக காணப்படுவதாக குற்றஞ்சாட்டிய தேஜஸ்வி யாதவ், பிகாரை குற்றம் மற்றும் ஊழல் இல்லாத மாநிலமாக உருவாக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, ஆர்ஜேடி வேட்பாளர்கள் போட்டியிடும் நான்கு தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்.
அதேசமயம் இன்று பெகுசராய் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த 20 ஆண்டுகளாக ஆர்.ஜெ.டி. தேர்தலில் வெற்றி பெறவில்லை. ஆனாலும் அது ஆணவத்தில் சிக்கித் தவிக்கிறது. இந்த ஆணவம்தான், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றியது.
பிகாரில் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பம் ஆர்.ஜெ.டி. குடும்பம். அக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்று வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். மறுபுறம், நாட்டின் மிகவும் ஊழல் நிறைந்த காங்கிரஸ் குடும்பம். இந்தக் குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்களும் ஜாமீனில் உள்ளனர். எனவே பிகார் மக்கள் இத்தகையவர்களை நம்பப்போவதில்லை” என பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
October 24, 2025 6:44 PM IST
Bihar Election : “ஊழல் இல்லாத பிகார்… போலி அல்ல; செயல்படுத்த முடிவது மட்டுமே வாக்குறுதிகள்” – தேஜஸ்வி யாதவ்


