Last Updated:
பிகார் தேர்தலில் பெண்கள் 71.6 சதவிகிதம் வாக்களித்து ஆண்களை மிஞ்சினர்.
பிகார் தேர்தலில் ஆண்களை விட அதிகளவில் பெண்கள் வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது. பாஜக தேர்தல் பிரசாரம் எடுபட்டிருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பிகார் சட்டமன்றத் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டத் தேர்தலில் 65.08 சதவிகிதமும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 68.76 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகின.
இதில், நடந்து முடிந்த தேர்தலில் வரலாற்றிலேயே ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த தேர்தலில் ஆண்கள் 62.8 சதவிகிதமும் பெண்கள் 71.6 சதவிகிதமும் வாக்களித்துள்ளனர். அதாவது, ஆண் வாக்காளர்களை விட 8.8 சதவிகிதம் பெண்கள் கூடுதலாக வாக்களித்திருக்கின்றனர்.
முதல் கட்டத் தேர்தலில் 69.04 சதவிகிதம், இரண்டாம் கட்டத் தேர்தலில் 79.04 சதவிகிதம் பெண்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
பெண்கள் அதிகளவில் வாக்களித்ததற்கு இரு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று பொருளாதார நிதியுதவி, மற்றொன்று பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என மகாகத்பந்தன் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்திருந்தார்.
இதே போன்று, தேசிய ஜனநாயக கூட்டணியும் பெண்களுக்கென்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. குறிப்பாக, தொழில் தொடங்கும் 75 லட்சம் மகளிருக்கு 2 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அது மட்டுமின்றி, தேசிய ஜனநாயக கூட்டணியின் பரப்புரையின் போது மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, பெண்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்படும் என கருத்துகள் எடுத்து வைக்கப்பட்டன. பாஜகவினரின் பரப்புரை எடுபட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
November 12, 2025 8:40 PM IST


