Last Updated:
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா, பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தின் நெடுநாள் முதலமைச்சராக இருந்துவந்த நிதிஷ்குமார், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றதைத் தொடர்ந்து, இன்று (14ஆம் தேதி) அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதேபோல், பீகார் அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. நிதிஷ்குமார் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே, பாஜக பீகாரில் ஆட்சி அமைக்கிறது எனும் பேச்சு எழுந்தது. அதிலும், பீகாரின் துணை முதலமைச்சராக பதவி வகித்துவரும் சாம்ராத் சவுத்ரியின் பெயரே முதலமைச்சர் பதவிக்கு அதிகம் பேசப்பட்டுவந்தது.
அந்தவகையில், பீகார் மாநிலத்தின் பாஜக மேலிட பொறுப்பாளராக இருந்துவரும் மத்திய அமைச்சர் சிவாரஜ் சிங் சௌஹான் தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சராக இருந்துவரும் சாம்ராத் சவுத்ரி பீகாரின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை இவர் முதலமைச்சர் பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் அரசியல் வரலாற்றில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1952ஆம் ஆண்டு முதல் தற்போது பாஜக ஆளாத மாநிலங்களின் பட்டியலில் இருந்துவந்த பீகாரில் தற்போது பாஜகவின் ஆட்சி அமைகிறது.


