Bench விதிகளை மாற்றும் ஐடி நிறுவனங்கள்…!! டிசிஎஸ், இன்போசிஸ் ஊழியர்களே உஷார்..!!
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ் , இன்ஃபோசிஸ் மற்றும் ஹெச்சிஎல் டெக் ஆகியவை தங்களது ‘பெஞ்ச்’ (Bench) ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளன.
இந்திய ஐடி நிறுவனங்களில் தற்போது எந்தவொரு குறிப்பிட்ட பிராஜெக்டிலும் பணிபுரியாமல் காத்திருப்பில் இருக்கும் ஊழியர்கள் ‘பெஞ்ச்’ ஊழியர்கள் என அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு பொருத்தமான பிராஜெக்ட் வரும் போது அதில் இணைக்கப்படுவார்கள். அதாவது புது பிராஜெக்ட் வரும் போது அதில் பணிபுரியும் வகையில் இவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

ஐடி நிறுவனங்களில் மொத்த ஊழியர்களில் 20% முதல் 30% வரையிலான ஊழியர்கள் இப்படி பெஞ்ச் ஊழியர்களாக தான் இருப்பார்கள். தற்போது அது 12%ஆக குறைந்துள்ள நிலையில் வரும் நிதியாண்டில் ஐடி நிறுவனங்கள் பெஞ்ச் ஊழியர்களின் எண்ணிக்கையை இன்னும் குறைக்க திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 8% ஆக குறைக்க உள்ளதாக இந்தியா டுடே செய்தி கூறுகிறது.
ஏற்கனவே ஒரு ஊழியர் பெஞ்ச்சில் இருக்கும் காலம் முன்பெல்லாம் 45-60 நாட்களாக இருந்தது. தற்போது இது 30-45 நாட்களாக குறைக்கப்பட்டு விட்டது. தற்போது ஊழியர்கள் எண்ணிக்கையும் குறைக்க ஐடி நிறுவனங்கள் திட்டமிடுவதால் மீண்டும் பணிநீக்கம் தலை தூக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தற்போதைக்கு அந்த அச்சம் இல்லை என கூறும் நிபுணர்கள் நிறுவனங்களில் மறுக்கட்டமைப்பை எதிர்பார்க்கலாம் என்றும் ஊழியர்கள் புது புது திறன்களுடன் அப்டேட்டாக இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஐடி நிறுவனங்கள் முன்பை போல அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பெஞ்சில் வைத்திருப்பது தேவையற்ற நிதி சுமையாக கருதுகின்றன. எனவே முன்கூட்டியே அதிக ஆட்களை வேலைக்கு எடுத்து வைக்கும் பழைய முறையை கைவிட ஐடி நிறுவனங்கள் தயாராகிவிட்டன. இப்போது தேவைக்கு ஏற்ப, அதுவும் குறிப்பாக ஏஐ , கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி போன்ற சிறப்பு திறன்கள் உள்ளவர்களை மட்டும் பணியமர்த்த நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கின்றன.
வருவாய் வளர்ச்சி மந்தமாக இருக்கும் சூழலில், நிறுவனங்கள் தங்களது லாப வரம்பை பராமரிக்க ஊழியர்கள் எண்ணிக்கையில் தான் கை வைக்கின்றன. எனவே ஊழியர்கள் பணிநீக்கம் என இல்லாமல் புதிதாக ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை குறைக்க போகின்றன. தற்போதுள்ள ஊழியர்களுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி, புதிய திட்டங்களுக்கு அவர்கள பயன்படுத்தவே முன்னுரிமை அளிக்கின்றன.
இந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் தேராத ஊழியர்கள் வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என கூறப்படுகிறது.அதாவது ஐடி துறையில் தற்போது பெரிய எண்ணிக்கையில் பெஞ்ச் ஊழியர்களை வைத்திருக்கும் நிலைமை மாறுகிறது. எனவே புதிய தொழில்நுட்பங்களை அப்டேட் செய்து திறன்களை மேம்படுத்தி கொள்வோர் நீண்ட காலம் இந்த துறையில் வேலையை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நிலை தான் வரும் நாட்களில் இருக்கும் என சொல்லப்படுகிறது.
