Last Updated:
பென் ஸ்டோக்ஸ் இல்லாத இங்கிலாந்து அணி இந்தியாவை சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு சாதகத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
பென் ஸ்டோக்ஸைப் போன்று முக்கிய வேகப்பந்துவீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் 5-ஆவது போட்டியில் இருந்து விலகி உள்ளார். இரண்டு முக்கிய வீரர்களை இழந்துள்ள இங்கிலாந்து அணி இந்தியாவை சமாளிக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரில் மொத்தம் 4 போட்டிகள் முடிந்துள்ளன. 2 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும்.
டிராவில் முடிந்தால் அல்லது இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அந்த அணி தொடரைக் கைப்பற்றி விடும். இத்தகைய சூழலில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் 5- ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
வலது தோளில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதற்கு பென் ஸ்டோக்ஸின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது. பேட்டிங் மட்டுமின்றி சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து மிகப்பெரிய அளவில் இங்கிலாந்தின் வெற்றிகளுக்கு அவர் உறுதுணையாக இருந்தார்.
July 30, 2025 4:12 PM IST