இதன் மூலம், கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிற்கான 42 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தெலங்கானா அரசு முடிவெடுத்துள்ளது.
இது அந்த மாநிலத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இதற்கு உரிமை கோரும் விவகாரத்தில், பெரும் அசம்பாவிதத்திற்கும் வழிவகுத்துள்ளது.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய, அம்மாநில மேல் சபை உறுப்பினர் தீன்மர் மல்லண்ணா, “முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 42 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளார். அதனை பி.ஆர்.எஸ். மேல்சபை உறுப்பினர் கவிதா கொண்டாடுகிறார். இதற்கும் அவருக்கும் என்ன தொடர்பு?
அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரா? பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? எங்களுடன் உணவு அல்லது படுக்கையைப் பகிர்ந்து கொண்டாரா?” என மோசமான விமர்சனத்தை வைத்திருந்தார்.
இது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீன்மரின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து, எம்.எல்.சி. கவிதா உடனடியாக தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்து அவரை இடைநீக்கம் செய்யச் சொல்லி கடிதம் கொடுத்தார். மேலும், இந்த மோசமான கருத்திற்கு அவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
அதேபோல், தீன்மரின் கருத்து கவிதா நடத்திவரும் ஜக்ருதி அமைப்பினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. அவர்கள் தீன்மர் கருத்திற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை தெலுங்கானா மெடிபள்ளியில் உள்ள தீன்மர் மல்லண்ணாவின் அலுவலகம் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலின் போது அவரது அலுவலகத்தில் இருந்து பாதுகாவலர் ஒருவர் தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். மேலும், கூட்டத்தை நோக்கி சுட்டதாகவும், தீன்மர் அலுவலகத்தின் தரையில் ரத்தக் கறை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அதேபோல், மக்கள் நடத்திய தாக்குதலில் தீன்மரின் அலுவலகம் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. மேலும், தாக்குதல் நடந்த நேரத்தின்போது, தீன்மர் அலுவலகத்தில் இருந்தார். இதனால், அம்மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கவிதா, “தெலுங்கானா ஜாக்ருதியில் உள்ள பி.சி. இயக்கங்களுக்காக நாங்கள் பணியாற்றினோம். இப்போது என்னை குறிவைத்ததற்குப் பின்னால் ஏதோ சதி இருக்கிறது. மல்லண்ணாவின் கருத்துக்கள் முற்றிலும் புண்படுத்தும் வகையில் உள்ளன.
நாளை நாங்கள் மகளிர் ஆணையத்தை சந்திக்கப் போகிறோம். மல்லண்ணாவை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும். ஜனநாயகத்தில், இப்படிப் பேசும் எவரையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
நான் ஒருபோதும் மல்லண்ணாவை தனிப்பட்ட முறையில் குறிவைத்ததில்லை. ஆனால் அவர் என்னை அவமதிக்க முயற்சிக்கிறார். பெண்களை மதிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
தாக்குதலுக்குப் பிறகு பேசிய தீன்மர், “என் மீது கொலை முயற்சி நடந்தது. என் பாதுகாவலர்கள் என்னைப் பாதுகாக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்கள் தாக்கிவிட்டு, எங்கள் மீது வழக்குப் பதிவு செய்தது வெட்கக்கேடானது.
இது முற்றிலும் திட்டமிடப்பட்ட தாக்குதல். இதற்குப் பின்னால் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
July 13, 2025 7:01 PM IST
BC இட ஒதுக்கீடு; பி.ஆர்.எஸ். கவிதா குறித்து மோசமான விமர்சனம்… எம்.எல்.சி. அலுவலகத்தை சூறையாடிய மக்கள்

