ஆனால், வாடிக்கையாளர் தனது லாக்கருக்கான சாவியை தொலைந்துவிட்டால் என்ன செய்வது என்பதில் பலருக்கும் குழப்பம் இருந்து வருகிறது. உண்மையில், லாக்கர் சாவி தொலைந்து விட்டால், அதனை மாற்றிக் கொள்ளும் செயல்முறை எளிதானது அல்ல. அதனுடன் ஆவணப்பணி, சரிபார்ப்பு, செலவுகள் மற்றும் சில சமயங்களில் நீண்ட நேர காத்திருப்பும் அடங்கும்.
வங்கிகள், லாக்கர் வசதிகளில் இரட்டை-கட்டுப்பாட்டு (dual control) அமைப்பை பின்பற்றுகின்றன. அதாவது,
– வாடிக்கையாளர் வைத்திருக்கும் தனிப்பட்ட சாவி ஒன்று
– வங்கியிடம் இருக்கும் முதன்மைப் பொறிமுறை (அதாவது, வங்கி வைத்திருக்கும் சாவி)
இந்த இரண்டும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டால் தான் லாக்கரைத் திறக்க முடியும். வாடிக்கையாளரின் சாவி தொலைந்துவிட்டால், வங்கியால் வழக்கமான முறையில் லாக்கரைத் திறக்க முடியாது. மேலும், பாதுகாப்புக் காரணங்களால் வங்கிகள் மாற்றுச் சாவிகளையும் வைத்திருப்பதில்லை.
லாக்கர் சாவி தொலைந்ததை உறுதி செய்தவுடன், உடனடியாக வங்கிக் கிளைக்கு முறையாகத் தெரிவிக்க வேண்டும். பெரும்பாலான வங்கிகள் இதற்காக எழுத்துப்பூர்வமான புகாரை கட்டாயமாக்குகின்றன. இது எந்தவொரு தவறான பயன்பாட்டையும் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.
வங்கியின் கொள்கையைப் பொறுத்து, இழப்பீட்டுப் பத்திரம் (Indemnity Bond) அல்லது காவல் நிலையத்தில் புகாரை (FIR) சமர்ப்பிக்க வாடிக்கையாளரிடம் கேட்கப்படலாம், குறிப்பாக பாதுகாப்பு சிக்கல் இருப்பதாக வங்கி கருதினால் இவை மேற்கொள்ளப்படலாம்.
ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியா (RBI/2021-22/86) வழிகாட்டுதலின் படி, சாவி தொலைந்துவிட்டால் வாடிக்கையாளருக்கு லாக்கரை ‘பூட்டை உடைத்துத் திறக்கும்’ (Break Open Procedure) செயல்முறைக்கு முழு சட்ட உரிமை உள்ளது.
இதுகுறித்து, பி. ஷங்கர் அட்வகேட்ஸ் நிறுவனத்தின் முதன்மை இணைப்பாளரான பிரேர்னா ராபின் கூறுகையில், “சாவி தொலைந்ததாகத் தெரிவிக்கப்பட்டவுடன், வங்கி ஒப்புதல் கடிதம் வழங்கி, வாடிக்கையாளர் மற்றும் சுயாதீன சாட்சிகள் முன்னிலையில் பூட்டை உடைக்கும் செயல்முறையை வெளிப்படையாக நடத்த வேண்டும்.”
இந்த செயல்முறை உடனடியாக நடப்பதில்லை. பொதுவாக, ஒரு குறிப்பிட்ட தேதி நிர்ணயிக்கப்படும், தொழில்நுட்ப வல்லுநர் ஏற்பாடு செய்யப்படுவார் மற்றும் லாக்கர் வைத்திருப்பவர் மற்றும் (இருந்தால்) அனைத்து கூட்டு உரிமையாளர்களும் முன்னிலையில் இருக்க வேண்டும்.
இந்த முழு செயல்முறையும் ஆவணப்படுத்தப்படும். சில சமயங்களில், எதிர்கால சிக்கல்களைத் தவிர்க்க லாக்கரில் உள்ள பொருட்களின் பட்டியலும் தயார் செய்யப்படலாம்.
இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் துஷார் குமார் கூறுகையில், “RBI குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என்றாலும், உடனடி நடவடிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்முறை ஒழுக்கம் போன்றவை கட்டாயமாகும். தேவையற்ற தாமதத்திற்கு இடமில்லை” என்றார்.
சாவி தொலைந்ததால் ஏற்படும் பழைய பூட்டை உடைத்தல் மற்றும் புதிய பூட்டைப் பொருத்துதல் போன்றவற்றுக்கான நிதிச் செலவை வாடிக்கையாளரே ஏற்க வேண்டும்.
ஆனால், இந்த செயல்முறையின் போது ஏற்படும் பாதுகாப்பு, கவனக்குறைவு அல்லது நடைமுறைத் தவறுகளுக்கான முழுப் பொறுப்பும் வங்கியையே சாரும்.
PSL அட்வகேட்ஸ் அண்ட் சாலிசிட்டர்ஸ் நிறுவனத்தின் அசோசியேட் பிருந்தா மிஸ்ரா கூறுகையில், “ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி, லாக்கர் உடைக்கும் செயல்முறையில் வங்கியின் தவறால் இழப்பு, சேதம் அல்லது உள்ளிருக்கும் பொருட்கள் வெளியேறினால், வங்கியே அதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதில், ஆண்டு லாக்கர் வாடகையின் 100 மடங்கு வரையிலான சட்டப்பூர்வ இழப்பீடும் அடங்கும்.”
வங்கிகள் சில குறிப்பிட்ட சட்டப்பூர்வ சூழ்நிலைகளில் மட்டுமே லாக்கர் அணுகலை மறுக்க முடியும். அவை,
– திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் வாடிக்கையாளர் கையெழுத்திடத் தவறினால்
– லாக்கர் வாடகை அல்லது தொடர்புடைய கட்டணங்கள் செலுத்தப்படவில்லை என்றால்
– நீதிமன்ற உத்தரவு அல்லது சட்டப்படி தடை இருந்தால்
இதனைத் தவிர, வாடிக்கையாளருக்கு லாக்கர் அணுகலை மறுப்பதற்கு வங்கிக்கு உரிமை இல்லை என அகார்ட் ஜூரிஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரரான அலய் ரஸ்வி கூறுகிறார்.
லாக்கர் அணுகல் மீண்டும் வழங்கப்பட்ட பிறகு, கீழ்கண்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்:
– புதிய சாவியை பாதுகாப்பான, ஆனால் நீங்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய இடத்தில் வைத்திருங்கள்
– வங்கி வழங்கினால், டிஜிட்டல் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் கூடிய லாக்கரைத் தேர்ந்தெடுக்கவும்
– உரிமை அல்லது கோரிக்கை தொடர்பான சர்ச்சைகளைத் தவிர்க்க, லாக்கரில் உள்ள பொருட்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை பராமரிக்கவும்
எனவே, வங்கியின் லாக்கர் சாவியை தொலைத்துவிட்டால், பதற்றமடைவதற்குப் பதிலாக, சரியான நடைமுறையைப் பின்பற்றுவதே முக்கியமானது. RBI விதிமுறைகள் வாடிக்கையாளரின் உரிமைகளை தெளிவாகப் பாதுகாக்கின்றன. சரியான தகவலும், விழிப்புணர்வும் இருந்தால், இதனை பாதுகாப்பாகவும், சட்டப்படியும் தீர்த்துக் கொள்ள முடியும்.

