இது தொடர்பாக, ஜப்பானிய குடிமக்களிடம் வான்வழித் தாக்குதல்கள் பற்றி எச்சரிக்கப்பட்டதாகவும், ஜப்பான் முழுவதும் 63 மில்லியனுக்கும் அதிகமான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 08:15 மணியளவில் ஜப்பான் மக்கள் எதிர்பாராத சமயத்தில், அமெரிக்கா எந்தவொரு எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்காமல், ஹிரோஷிமாவில் (Hiroshima) லிட்டில் பாய் (Little Boy) என்ற பெயரில் முதல் அணுகுண்டை போட்டது. குண்டு விழுந்த வினாடியில் 500 மீட்டர் சுற்றளவில் இருந்த மக்கள் அனைவரும் கனப் பொழுதில் புகையோடு காணாமல் போனார்கள்.

சுமார் 15,000 டன் டிரைனிட்ரோடோலூயினுக்கு (TNT) சமமான ஆற்றல் வெளியான இந்தப் பேரழிவு தாக்குதலில் 70,000 முதல் 80,000 பேர் அந்தக் கணத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் , அணுகுண்டு தாக்குதலுக்கு முன்னர் ஹிரோஷிமாவில் 90,000 கட்டடங்கள் இருந்த நிலையில், அணுகுண்ட வீசப்பட்ட 1.6 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பரவிய தாக்கத்தால் அவற்றில் 28,000 கட்டடங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. உலகுக்கே இது பெரிய அதிர்ச்சியாக இருக்க, அடுத்த மூன்றாவது நாளே (1945 ஆகஸ்ட் 9) அதற்கு மேலும் இன்னொரு அதிர்ச்சியைத் தரும் வகையில் நாகசாகியில் (Nagasaki) ஃபேட் மேன் (Fat Man) என்ற பெயரில் இரண்டாவது அணுகுண்டை வீசியது.

&w=1200&resize=1200,675&ssl=1)