2021 தேர்தல் முடிவுகள்: கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 60 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. கூட்டணியில் இருந்த அசாம் கண பரிஷத் ஒன்பது இடங்களையும், யுனைடெட் பீப்பிள்ஸ் பார்ட்டி லிபரல் (UPPL) 6 இடங்களையும் வென்றன. இதன் மூலம் 126 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் இக்கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
இந்திய தேசிய காங்கிரஸ் 29 இடங்களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) 16 இடங்களை வென்றது. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டது ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அமைந்தது.
அசாம் கூட்டணி பலம்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அசாம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் கூட்டணி (Bodoland People Front) உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் (Asom Sonmilito Morcha) Raijor Dal, Assam Jatiya Parishad, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
2026 தேர்தலில், பாஜக தனது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 1985ஆம் ஆண்டு அசாம் ஒப்பந்தத்திற்குப் பின் அனைத்து அசாம் மாணவர்கள் போராட்டம் அமைப்பு அசாம் கண பரிசத் எனும் அரசியல் கட்சியாக உருவெடுத்தது. பூர்வீக அசாம் மக்களின் அடையாளத்தைப் பாதுகாக்கும் கட்சியாக இது பார்க்கப்படுகிறது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பூர்வீக அசாமிய மக்களின் வாக்குகளைப் பெறும் என கணிக்கப்படுகிறது. அதேபோன்று, போடோலாந்து தன்னாட்சிப் பகுதியில் உருவாக்கப்பட்ட போடோலாந்து மக்கள் கூட்டணி மிகவும் செல்வாக்கு மிக்கது. போடோ பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும், அந்தப் பகுதியின் வளர்ச்சிக்காகவும் இக்கட்சி செயல்படுகிறது. இதன் காரணமாக, பழங்குடியின மக்களின் ஆதரவு பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
பாஜக இம்முறை வளர்ச்சி நலத்திட்டங்கள் என்ற முழக்கத்துடன், பொது சிவில் சட்டம், சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிரான கடும் நடவடிக்கைகள் மற்றும் ‘லவ் ஜிஹாத்’ எதிர்ப்பு போன்ற தீவிர நிலைப்பாடுகளைத் தனது தேர்தல் ஆயுதங்களாக முன்னிறுத்தியுள்ளது. குறிப்பிடத்தக்க அம்சமாக, 34 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட அசாமில், பாஜக கூட்டணி ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூடக் களமிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலையை அறுவடை செய்ய முயல்கிறது. சிறுபான்மை மக்களின் நம்பிக்கை, சமூக நல்லிணக்கம் மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை மையமாக வைத்து காங்கிரஸ் தனது வியூகங்களை வகுத்துள்ளது.
இன்றைய கருத்துக் கணிப்பு முடிவுகள் அரசியல் போக்கின் அடிப்படையில் பார்க்கையில், ஆளுங்கட்சி தனது செல்வாக்கை விரிவுபடுத்தி முன்னிலை வகிப்பதையும், எதிர்க்கட்சிகள் தங்களை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளப் போராடுவதையும் காண முடிகிறது.
கருத்துகணிப்பு முடிவுகள்: அசாம் மாநிலத்தின் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி 90-100 இடங்களை கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 23-33 இடங்களை கைப்பற்றும் என Vote Vibe நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. AUDF தலைமையிலான கூட்டணி 0-6 இடங்களை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.
Axis My India நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 88-100 இடங்களை கைப்பற்றும் எனவும் காங்கிரஸ் கூட்டணி 24-36 இடங்களை கைப்பற்றும் எனவும் AUDF கூட்டணி 0-3 இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது. JVC நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 88-101 இடங்களை கைப்பற்றும் எனவும் காங்கிரஸ் கூட்டணி 23-33 இடங்களை கைப்படுறம் எனவும் AUDF கூட்டணி 2-2 இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆளுங்கட்சி தனது செல்வாக்கை விரிவுபடுத்தி ‘ஹாட்ரிக்’ அடிக்குமா? எதிர்க்கட்சிகள் தங்களை நிலைநிறுத்தி ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வருமா? என்பதை மே மாதம் நான்காம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் மாநிலத்தின் சமூக-அரசியல் திசையைத் தீர்மானிக்கும் புள்ளியாக பார்க்கப்படுகிறது.
