Last Updated:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
ஆசியாவை சேர்ந்த 8 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் லீக் சுற்று முடிவுகளின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 6 போட்டிகள் கொண்டதாக இந்த சுற்று நடைபெறுகிறது.
இதில் முதல் போட்டியில் இலங்கை அணியை வங்கதேசம் வென்றது. அதை தொடர்ந்து நடந்த இரண்டாவது சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்னும் 4 போட்டிகள் மீதம் உள்ளன. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன. இதற்கிடையே போட்டிக்கு பின்னர் இந்திய பத்திரிகையாளர்களை சந்திப்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தவிர்த்து வருகின்றனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றில் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி ஞாயிறு அன்று மோதின. அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுக்காமல் சென்றனர். இது தொடர்பாக பாகிஸ்தான் அணி பிரச்சனையை கிளப்பியது. இதற்கு விளக்கம் அளித்த இந்திய அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான் வீரர்களுக்கு கை குலுக்குவதைத் தவிர்த்ததாக கூறியிருந்தார்.
அதன் பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான லீக் போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீரர்கள் களத்துக்கு வராமல் தாமதம் செய்தனர். அவர்களது நெருக்கடி காரணமாக இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது நடுவராக செயல்பட்ட ஆண்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் நேற்று நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி மிக எளிதாக பாகிஸ்தானை வீழ்த்தியது.
அதன் பின்னர் இந்திய அணி வீரர்கள் கைகுலுக்காமல் புறக்கணித்து சென்றனர். இதற்கு இடையே போட்டி முடிந்த பின்னர் இந்திய பத்திரிகையாளர்களை சந்திப்பதை பாகிஸ்தான் வீரர்கள் தவிர்த்து வருகிறார்கள். செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேள்வி கேட்பதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த அவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இது தொடர்பாக இந்திய பத்திரிகையாளர்கள் நிர்வாக கமிட்டியிடம் புகார் செய்துள்ளனர். அதே நேரம் சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்திய அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ் பாகிஸ்தான் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதனை சுட்டிக்காட்டி உள்ள நெட்டிசன்கள் இந்த பண்புகளை இந்தியர்களிடமிருந்து பாகிஸ்தான் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விமர்சித்துள்ளனர்.
September 22, 2025 6:42 PM IST


