Last Updated:
இந்திய அணியின் பௌலிங்கை இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலர் கூறியுள்ளனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் மொத்தம் 6 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி அவை அனைத்திலும் வெற்றி வாகை சூடி உள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர் கொள்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்திய அணியை பொறுத்த அளவில் ஹர்திக் பாண்டியாவுக்கு நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் நாளைய போட்டியில் விளையாடுவார் என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இந்த தகவல் இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றதும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக இந்திய அணியின் பௌலிங்கை இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலர் கூறியுள்ளனர். இந்த நிலையில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பெற வேண்டும் என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், எதற்காக அர்ஷ்தீப் சிங்கை பெஞ்சில் அமர வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. ஆசிய கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே அர்ஷ்தீப் சிங் இந்திய அணியில் முக்கியமான வீரர்.
அவர் ஆடும் 11 இடம்பெற்றிருக்க வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். அவர் இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்துள்ளார். தான் அணியில் இடம் பெறுவது அவசியம் என்பதை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அவரை இந்திய அணியில் தவிர்க்க முடியாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
September 27, 2025 4:51 PM IST


