சென்னை:
AI எனும் செயற்கை நுண்ணறிவு வருகையால் IT துறைகளில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் 2026 நிதியாண்டில் 12,200 பேரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் டிசிஎஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அந்த நிறுவனத்தில் பணியாற்றுவோரை கலங்க வைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்று டாடா. இந்த டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக தான் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services) எனும் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சுருக்கமாக இந்த நிறுவனம் TCS என அழைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் டிசிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் டிசிஎஸ்-ம் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் தான் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்த ஓராண்டில் 12,000 பேரை வேலையில் இருந்து நீக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை டிசிஎஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கை 2026 நிதி ஆண்டில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஓராண்டில் 12 ஆயிரம் பேர் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து வேலையிழக்க உள்ளனர்.
இந்த பணி நீக்க நடவடிக்கைக்கு முக்கிய காரணம் ஏஐ தான். மேலும் இதுதொடர்பாக டிசிஎஸ் ஐடி நிறுவனம் சார்பில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஏஐ மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பான மாற்றங்கள், மார்க்கெட்டை விரிவுப்படுத்துதல் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. பொதுவாக தொழில்நுட்ப மாற்றங்கள், மார்க்கெட்டை விரிவுப்படுத்தும்போது ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கி பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
ஆனால் தற்போதைய இந்த மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக சுமார் 12 ஆயிரம் பணியிடங்கள் குறைக்கப்படும். இது மிடில் மற்றும் சீனியர் மேனேஜ்மென்ட்டை பாதிக்கும். மேலும் நிறுவனத்தை துரிதமாக செயல்பட வைக்கவும், எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றம் செய்வதும் கட்டாயமாக உள்ளது. எங்களின் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித சேவையிலும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்த மாற்றத்தை கவனத்துடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என டிசிஎஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) கிரிதிவாசன் அளித்த ஒரு பேட்டியில், ‛‛தொழில்நுட்பம் மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நாங்கள் மாறி வருகிறோம். எதிர்காலத்துக்கு ஏற்ப தயாராகி வருகிறோம். ஏஐ பயன்படுத்தி வருகிறோம். தற்போதைய நடவடிக்கை நிறுவனத்தில் பணியாற்றும் 2 சதவீதம் பேருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
சமீபகாலமாகவே மைக்ரோசாப்ட், இன்டெல் உள்பட பல்வேறு முன்னணி நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிசிஎஸ் சார்பில் அத்தகைய ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது 12 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்து இருப்பது அந்த நிறுவனத்தின் ஊழியர்களை பெரும் அதிர்ச்சியில் தள்ளி உள்ளது.




