AI , ஐடி நிபுணர்கள் வேண்டாம்! எலக்ட்ரீஷியன்கள், வெல்டர்கள் தான் வேண்டும்- ரூட்டை மாற்றும் கூகுள் !!
உலகளவில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் ஐடி, ஏஐ, சைபர் செக்யூரிட்டி படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். இந்த சூழலில் உலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகுள் எங்களுக்கு ஐடி ஊழியர்கள், ஏஐ நிபுணர்கள் வேலைக்கு வேண்டாம் , எலக்ட்ரீஷியன்கள், வெல்டர்கள் தான் வேண்டும் என அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் மென்பொருள் பொறியாளர்களை விடுத்து சுமார் 50 மில்லியன் டாலர்களை அதாவது 415 கோடி ரூபாய்க்கு மேல் வெல்டர்கள் மற்றும் எலக்ட்ரீஷியன்களை உருவாக்க பயிற்சி அளித்து வருகிறது. நாம் பயன்படுத்தும் AI சாட்பாட்கள், கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற அனைத்துமே இன்டர்நெட்டில் இயங்குவது போலத் தோன்றினாலும், அவற்றுக்குப் பின்னால் பிரம்மாண்டமான டேட்டா சென்டர்கள் மற்றும் நெட்வொர்க் கிரிட்டுகள் இயங்க வேண்டும்.

இவற்றை உருவாக்கவும், பராமரிக்கவும் கணினி பொறியாளர்கள் மட்டும் போதாது, களத்தில் இறங்கி வேலை செய்யக்கூடிய எலக்ட்ரீஷியன்களும், வெல்டர்களும் அதிக எண்ணிக்கையில் தேவை. தற்போது இத்தகைய பணியாளர்களுக்கு தான் உலகம் முழுவதும் திண்டாட்டமாக இருக்கிறது.
குறிப்பாக அமெரிக்காவில் வெல்டிங், எலக்ட்ரீஷியன் வேலைகளுக்கு ஆட்களே இல்லையாம். இந்நிலையில் கூகுளின் அறக்கட்டளை அமைப்பான Google.org, அமெரிக்காவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வெல்டிங், எலக்ட்ரீஷியன் பணிகளுக்கான தொழிற்பயிற்சி வழங்க உள்ளது. இதற்காக 50 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது.

இந்த நிதி நேரடியாக 14 தொழிலாளர் சங்கங்கள் மற்றும் 4 வணிகக் கூட்டமைப்புகளுக்குச் சென்றடையும். இதன் மூலம் எலக்ட்ரீஷியன்கள், வெல்டர்கள், பிளம்பர்கள், பைப் ஃபிட்டர்கள் மற்றும் ஏசி மெக்கானிக்குகள் போன்ற வேலைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
தற்போது ஏஐ தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதால், உலகெங்கிலும் டேட்டா சென்டர்கள் தேவையும் அதன் கட்டுமானமும் பராமரிப்பும் அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப தொழிலாளர்கள் இல்லை. 2030-ஆம் ஆண்டிற்குள் சுமார் 21 லட்சம் தொழில்நுட்பக் கட்டுமானப் பணியிடங்கள் ஆட்கள் இல்லாமல் காலியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை உடைக்கவே கூகுள் இந்த முதலீட்டை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்காவின் டிஜிட்டல் பொருளாதாரம் என்பது நமது நிஜ உலக உள்கட்டமைப்பை (Physical Infrastructure) நம்பியே உள்ளது. அதை உருவாக்கிப் பராமரிக்கும் எலக்ட்ரீஷியன்கள், பைப்ஃபிட்டர்கள் மற்றும் வெல்டர்களின் உழைப்பு மிக முக்கியமானது என குறிப்பிட்டிருந்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், கூகுள் பழைய முறை பயிற்சிகளை மட்டும் தரப்போவதில்லை. எலக்ட்ரீஷியன்கள் மற்றும் வெல்டர்கள் தங்கள் அன்றாட வேலைகளில் AI கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் சேர்த்தே கற்று தருகிறதாம்.
மெடா நிறுவனமும் கூட இதே போன்ற ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தான் வேலைக்கு வேண்டும் என தேடி தேடி வேலைக்கு ஆட்களை எடுத்த கூகுள் போன்ற நிறுவனங்கள் தற்போது ஏஐ வசம் அந்த வேலைகளை கொடுத்துவிட்டு உடல் உழைப்பு கொண்ட மனித திறமை தேவைப்படும் வேலைகளில் கவனத்தை திருப்பியுள்ளன.

