பெட்டாலிங் ஜெயா,
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், நேஷன்கேட் சோல்யூஷன் நிறுவனத்தின் அலுவலகங்களில் சோதனை நடத்தியது. இது, உதிரி இரும்பு (scrap metal) கடத்தல் தொடர்பான பெரும் ஊழல் வழக்கில் நடைபெறும் விசாரணையின் ஒரு பகுதியாகும்.
இந்த சோதனை கடந்த திங்கள் அன்று நடைபெற்றதை நேஷன்கேட் நிறுவனம் உறுதிப்படுத்தியது. எனினும், நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகள் தொடர்ந்து இயங்குவதாகவும் அது கூறியுள்ளது.
“இந்த குற்றச்சாட்டுகளை நிறுவனம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொள்கிறது. MACC-க்கு முழுமையாக ஒத்துழைக்கும் வகையில் தேவையான இடைக்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, தேவையான தகவல்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெர்னாமா வெளியிட்ட செய்தியில், பணியாளர்களிடம் லஞ்சம் கொடுத்து உதிரி இரும்புகளை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தது எனக் கூறப்படும் சில நிறுவனங்களுக்கு எதிராக MACC ஐந்து மாநிலங்களில் பெரும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்தச் செயல்கள் மூலம், அரசிற்கு சுமார் RM950 மில்லியன் வரிப்பண இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையை MACC தலைவர் அஸாம் பாக்கியும் உறுதிப்படுத்தியுள்ளார்.




