Last Updated:
இன்றைய ஐபிஎல் பிளேஆஃப் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான பிளேஆஃப் சுற்றை எட்டியுள்ளது. லீக் சுற்றுகளின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் உள்ளது. இரு அணிகளும் 14 போட்டிகளில் 9 போட்டிகளை வென்றுள்ளன. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.
முதல் குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்று மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவிருக்கின்றன. இரு அணிகளும் கோப்பையை வெல்லாத நிலையில், இன்று வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் நிலை உள்ளது.
ஆனால் இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டால் என்னவாகும் என்ற கேள்வி தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஐபிஎல் விதிகளின்படி, பிளேஆஃப் சுற்றில் மழை குறுக்கிட்டால், 120 நிமிடங்கள் போட்டியின் நேரம் அதிகரிக்கப்படும். இந்த நேரம், டைம் அவுட் மற்றும் இன்னிங்ஸ்களுக்குள் இடையே உள்ள நேரத்தில் கழிக்கப்படும்.
ஒருவேளை மழை தொடர்ந்து பெய்து, போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், புள்ளிப்பட்டியலில் முதலில் உள்ள அணியே இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும். அதாவது புள்ளிப்பட்டியலில் தற்போது முதலில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணிதான் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.


